பற்றி எரியும் போது பிடில்.. தலைக்கு மேல் வெள்ளம்..! இதெல்லாம் வேண்டாத வேலை.. வெகுண்டெழுந்த ஓபிஎஸ்
சென்னை: சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை, இந்தக் கார் பந்தயத்தின் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவாரே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் பார்முலா நான்கு கால்பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை இந்த பந்தயம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுக்க கட்டாயப்படுத்துவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எம தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக திமுக அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உலகத் தமிழர்கள் எல்லாம் நிலைகுலைந்து போன நிலையில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார் மறைந்த தி.மு.க. தலைவர். அதே வழியில், தற்போது கார் பந்தயத்தை நடத்த துடிக்கிறார் தற்போதைய திமுக தலைவர்.
தமிழ்நாட்டினுடைய கடன் 8,33,362 கோடி ரூபாயாகயும், நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம்தானா என்பதை திமுக அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம், ரேஷன் கடைகளில் கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, கல்விக் கடன் ரத்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான 354 அரசாணையை நடைமுறைப்படுத்துதல், எரிவாயு மானியம், மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், இரண்டு லட்சம் கூடுதல் பணியிடங்களை உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில், பாதிக்கப்பட்டோர் அனைவரும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். பல பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது.
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. கடந்த 20 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. போதைப் பொருட்கள் நடமாட்டம் காரணமாக ஆங்காங்கே கொலை, கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இப்படிப்பட்ட சோதனை காலத்தில், சென்னையில் கார் பந்தயம் நடத்துவது என்பது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது.
சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இந்தக் கார் பந்தயத்தின் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் முன்னிலைப்படுத்தப்படுவாரே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை. மாறாக, மக்களின் பணம் வீணடிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கார் பந்தயம் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications