"நாங்கல்லாம் அப்பவே அப்படி.." பல காளைகளை அடக்கியிருக்கேன்.. அமைச்சருக்கு ஓபிஎஸ் அதிரடி பதில்
சென்னை: இளம் காளையாக இருந்தபோது பல காளைகளை தாம் அடக்கியிருப்பதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறார் என செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சட்டசபையில் வினவினார்.
அவருக்கு பதிலளித்து பேசுகையில் மேற்கண்ட இந்த தகவலை வெளியிட்டார் ஓ.பி.எஸ்.

சட்டசபை
தமிழக சட்டசபையில் கைத்தறித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு சில ருசிகர நிகழ்வுகளும் சட்டசபையில் நடந்தன. அந்தவகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு தடை
மேலும் தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது என்பது குறித்தும் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், செய்தித்துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறார் என வினவினார்.

அமைச்சருக்கு பதில்
அமைச்சர் சாமிநாதனுக்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இளம் காளையாக இருந்தபோது பல காளைகளை தாம் அடக்கியிருப்பதாக தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. மேலும், மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் வகையில் காளைகள் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில்
அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு 'ஜல் ஜல் ஜல்' என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் ஆட்சிக்காலம் குறித்து ஒபிஎஸ் பேசிய கருத்துக்கு அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் ஆட்சேபனை தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications