மொத்த இந்தியாவுக்கும் இனி சென்னை தான்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ராணுவம் வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: இந்தியா முழுவதிலும் உள்ள ராணுவ குடும்ப ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையொட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஓய்வூதிய குறைகளை 'வாட்ஸ் அப்'பில் பதிவு செய்து நிவர்த்தி செய்யலாம் என பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 60,000 பாதுகாப்பு படை வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஓய்வுபெற்ற சேவைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் சிப்பாய்கள் ஆவர். அவர்கள் ஓய்வுபெறும் போது பொதுவாக 40 வயதுக்கு கீழ் இருக்கும்.
இதுதவிர மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத் எல்லையில் இருந்து ஓய்வு பெற்ற மத்திய ஆயுதக் காவல் படை வீரர்களுக்கு ஓய்வு பெறும் போது, மத்திய அரசு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அந்தஸ்து வாங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளை இதற்கென மத்திய அரசால் செயல்படும் அமைப்பு உருவாக்கி வருகிறது. மாநில அரசுகளும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு,கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "குடும்ப ஓய்வூதியதாரர்களின் பல்வேறு ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த 1-ம்தேதி முதல் வருகிற 31-ம்தேதி வரை குடும்ப ஓய்வூதிய துரித குறை தீர்ப்பு முகாம் மத்திய அரசினால் நடத்தப்படுகிறது.
இந்த முகாமின் பொருட்டு இந்தியா முழுவதிலும் உள்ள ராணுவ குடும்ப ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தற்போது சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் குடும்ப ஓய்வூதியம் வழங்க ஒப்புதல், அதுதொடர்பான குறை தீர்ப்பு ஆகிய பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு முகாமில் முப்படைகளை சேர்ந்த குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்துகொள்ள 8807380165 என்ற தொலைபேசி எண்ணில் 'வாட்ஸ் அப்'பில் பதிவு செய்து குறைகளுக்கு நிவர்த்தி பெறலாம்" இவ்வாறு பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications