ரைட்டு.. ”இந்தி திணிப்பை எதிர்ப்போம்” வெங்கய்யா நாயுடு திறந்துவைத்த கருணாநிதி சிலையில் கம்பீர வாசகம்!
சென்னை: இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் கருணாநிதி சிலையில் பொறிக்கப்பட்டு உள்ளன.
Recommended Video
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைக்கப்பட்ட 16 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாடு திறந்துவைத்தார்.
இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் குடும்பத்தினர், அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருணாநிதி சிலை திறப்பு விழா.. கனிமொழியுடன் வந்த ராசாத்தி அம்மாள்.. நெகிழ்வாக வரவேற்ற ஸ்டாலின்
வெண்கல சிலை
ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்பட்ட சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள். 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார்.
பெரியார் அண்ணாவுக்கு நடுவே
கருணாநிதியின் இந்த புதிய சிலையே தமிழ்நாட்டில் உலோகத்தினால் அமைக்கப்படும் மிக உயரமான சிலை என கூறப்படுகிறது. இந்த சிலைக்கு ரூ.1.17 கோடி மதிப்பில் செலவிடப்பட்டு உள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணா சாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும், அதற்கு அருகே அண்ணா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைக்கு மத்தியில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.
சாலையோரம் சிலை
இந்த சிலையை சாலைக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதிக உயரம் கொண்ட இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு வரலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ஓமந்தூரார் வளாகத்தில் சாலையோரம் வைக்க இறுதியாக முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தி திணிப்புக்கு எதிராக வாசகம்
இந்த சிலையில், கருணாநிதியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீர்வோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" ஆகிய 5 வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.