ஆக்சிஜன் இல்லை... கைவிரித்த பெங்களூரு மருத்துவமனை.. சென்னைக்கு பறந்த ஆம்புலன்ஸ்.. திக் திக் பயணம்
சென்னை: பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டாதால், ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட திக் திக் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேவையான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரு உள்ளது. நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்,

ஆக்சிஜன் இல்லை
இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெண் நோயாளி ஒருவர், அம்புலன்ஸ் மூலம் கடைசி நேரத்தில் சென்னைக்கு சுமார் 350 கிலோமீட்டர் தூரம் அழைத்து வரப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் இந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால், நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து கிளம்புமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

ஆக்சிஜன் வேண்டும்
தீவிர பாதிப்பு இல்லாத நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டனர். இருப்பினும், அந்த பெண் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தார். இதனால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண் சரிவர சுவாசிக்கக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஆக்சிஜன் உதவி தேவைப்படும் என்றும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர் தெரிவித்திருந்தார்.

பெங்களூரு முழுக்க அதே நிலை
இதன் காரணமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படாமல் இருக்க அப்பெண் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். இது குறித்து போலீசாரிடமும்கூட அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், மருத்துவமனையில் ஆக்சிஜன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதால் மருத்துவமனை கைவிரித்துவிட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்குச் செல்ல அவர் முயன்றார். ஆனால், அனைத்து மருத்துவமனைகளிலும் அதே நிலை தான் இருந்தது.

சென்னை மருத்துவமனை
அப்பெண்ணின் தந்தை ஓய்வுபெற்ற தூதர். அவரது உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கையை அப்பெண்ணால் பெற முடிந்தது. இருப்பினும், சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும். அவ்வளவு நேரம் ஆக்சிஜன் உதவியில்லாமல் அவரால் சுவாசிக்க முடியாது.

திக் திக் பயணம்
அந்த பெண்ணை பத்திரமாகச் சென்னைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் ஒன்று தயார் செய்யப்பட்டது. பயணத்தைத் தாக்குப்பிடிக்கும் வகையில் மூன்று லிட்டர் ஆக்சிஜனுடன் அம்புலன்ஸ் பெங்களூரூவில் இருந்து புறப்பட்டது. ஒரு வழியாகப் பெரும்பாடுபட்டு ஆறு மணி நேர பயணத்திற்கு பிறகு, அவர் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடலில் இருக்கும் ஆக்சிஜன் நிலை (oxygen saturation level) அப்போது 67ஆக குறைந்தது.

உயிர் காத்த ரெம்டெசிவிர்
இதனால் அவருக்கு ஒன்பது ரெம்டெசிவிர் செலுத்தப்பட்டது. அவருக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதிலும் அப்போது சிக்கல் எழுந்தது. ரெம்டெசிவிர் தட்டுப்பாடு காரணமாக மதுரை, கோவை எனப் பல மாவட்டங்களில் இருந்து அவருக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பெங்களூரு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி, ஐசியு படுக்கை இல்லாமல் பலர் கண் முன்னே உயிரிழக்கும் மோசமான நிகழ்வுகளையும் தான் பார்க்க நேர்ந்ததாகவும் அவர் அச்சத்துடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications