2020-21 இந்திய பொருளாதாரத்தின் இருண்ட காலம்.. பணத்தை கடன் வாங்கியாவது செலவு செய்யுங்கள்.. ப.சி.
சென்னை: கடந்த 40 ஆண்டுகளில் 2020- 2021 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மிக இருண்ட காலம் என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் இரு ஆண்டுகளுக்கு முன்பை விட பெரும்பாலான இந்தியர்களை ஏழைகளாகிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 4 காலாண்டு பொருளாதார செயல்திறனை பார்க்கும் போது 2020- 2021 நாற்பதாண்டு கால பொருளாதாரத்தில் மிக இருண்ட ஆண்டு ஆகும்.
அது போல் 2021-22 நிதியாண்டும் இருண்டு போய்விடக் கூடாது. 4 காலாண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளே உண்மையை சொல்லும். மத்திய அரசு விழித்து கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும்.
லட்சத்தீவு என்பது மக்களின் சொர்க்கம்; நிர்வாகி பொது ஊழியன், ஆட்சியாளர் அல்ல - ப. சிதம்பரம் ட்வீட்
பொருளாதார நிபுணர்கள்
தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும். தற்போதைய இந்த பொருளாதார நிலைக்கு கொரோனா பெருந்தொற்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் பாஜகவின் திறமையின்மையும் இருப்பதால் பொருளாதாரம் மிகவும் மோசமாகிவிட்டது.
நல்ல யோசனைகள்
புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், நிறுவனங்களின் நல்ல யோசனைகளை மத்திய அரசு மறுத்துக் கொண்டே இருந்தது. இப்போதே மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவின் 3ஆவது பரவலை தடுத்து நிறுத்த வேண்டும். பொருளாதாரத்தில் இருந்து மீண்டுவிட்டதாக ஆதாரமே இல்லாத ஒரு பொய்யான கதையை மத்திய அரசு தெரிவித்தது.
பொருளாதாரத்தில் சரிவு
இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும். பணத்தை அச்சிட்டு, செலவை அதிகரித்தால் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். பணத்தை அச்சிட்டோ அல்லது கடன்வாங்கியோ அரசு செலவு செய்ய வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இவர்களது தவறான கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் ஒரு முடிவுகளையும் அறிவிக்காமல் முடிந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் 11 சதவீதத்தை தாண்டிவிட்டது.
பொருளாதாரம்
ஏராளமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதெல்லாம் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. ஏழை மக்களின் ஆழ்ந்த துயரத்தை சுட்டிக் காட்டுகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது என்றார் ப சிதம்பரம்.