கோவை பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதான பத்ரப்பன் பெண்களுக்கு வள்ளி கும்மி ஒயிலாட்ட பயிற்சி அளித்து வருகிறார்.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 34 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 87 வயதான பத்ரப்பன் பெண்களுக்கு வள்ளி கும்மி ஒயிலாட்ட பயிற்சி அளித்து வருகிறார்.
ஆண்கள் நடனமாக கருதப்படும் நிலையில் மாற்றாக பெண்களுக்கு பயிற்சி அளித்து ஆட வைத்துள்ளார் பத்ரப்பன். மேலும் தனது கலையின் மூலம் பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இவரை தவிர, இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் என்ற பெருமையை பெற்ற பர்பதி பருவா,
புகழ்பெற்ற பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் - சாமி முர்மு, மிசோரத்தை சேர்ந்த சமூக சேவகர் -சங்க்தங்கிமா, பழங்குடியினர் நல பணியாளர் - ஜாகேஷ்வர் யாதவ், சிர்சாவைச் சேர்ந்த திவ்யாங் சமூக சேவகர் - குர்விந்தர் சிங், காசர்கோட்டைச் சேர்ந்த நெல் விவசாயி - சத்தியநாராயணா பெளேரி, மைசூரைச் சேர்ந்த பழங்குடியினர் நலப் பணியாளர் சோமண்ணா உள்பட 34 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications