பரந்தூர் ஏர்போர்ட்: நிலம் கையகப்படுத்த ரூ.35 லட்சம் முதல் 2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்து அரசாணை!
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. ஆனால், அப்பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசின் தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள 3,331.25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி உரிமையாளர் எவ்வளவு நிலம் வைத்துள்ளார் என்பதை கணக்கீடு செய்து, அவர் எந்த பகுதிக்குள் வருகிறார், அந்த பகுதியில் ஒரு ஏக்கருக்கு விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான இழப்பீடு கணக்கீடு செய்யப்படும்.
அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை செய்யப்பட்ட உடன், உடனடியாக அந்த தொகையை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications