ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசும், மருத்துவக் கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கவுன்சில் தேர்தலில் அதிகாரம் படைத்த அரசு மருத்துவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிகிறது எனக் கூறி மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாக்குச்சீட்டு நடைமுறையால் தகுதியான நபர்களால் நிர்வாகிகள் பதவிக்கு வர முடியவில்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

செல்வாக்கு பெற்ற மருத்துவர்கள்..
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19,500 பேர் அரசு மருத்துவர்கள் ஆவர். நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்களும் அரசு மருத்துவர்களாகவே இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர்.

தகுதி உடையவர்கள் வர முடியவில்லை..
அதுமட்டுமல்லாமல், மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவர்களிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை அவர்கள் வீழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக, அனைத்து வித தகுதிகள் இருந்தும் பல மருத்துவர்களால் நிர்வாகிகள் பதவிக்கு வர முடியவில்லை.

ஆன்லைன் முறை..
இதனிடையே, வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், ஜனவரி 19-ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 19-ம் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலமாக வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

உத்தரவு..
இந்த மனுவானது, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையையும் அவர் தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications