டெல்லியே ஆடிப்போச்சே! பாஜகவுக்கு கல்தா? அதிமுக பக்கம் கரை ஒதுங்கும் பாமக, தேமுதிக.. பின்னணி இதுதானா?
சென்னை: பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரப்போவது யார் என்பதில் பாஜக, அதிமுக இடையே பெரிய ரேஸே நடந்த நிலையில், பாமக, தேமுதிக இரு கட்சிகளுமே அதிமுக பக்கம் சாய முடிவெடுத்துள்ளார்களாம். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் காட்டும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதிமுக கூட்டணி: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனினும், தேமுதிக இரட்டை இலக்கங்களில் சீட் கேட்டு வருவதாகத் தகவல் வெளியானது. பாமகவை பொறுத்தவரை கடந்த எம்பி தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றது. அதேபோல இந்த முறையும் கட்டாயம் வேண்டும் என்று உறுதியாக உள்ளது.
அதிமுகவும் பாஜகவும் தங்கள் கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிகவை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இரு கட்சிகளின் தரப்பில் இருந்தும் அழைப்பு வருவதன் காரணமாக பாமக மற்றும் தேமுதிக இரு கட்சிகளுமே, முடிந்தவரை சீட்டை அதிகம் பெறும் வகையில் பேரத்தில் ஈடுபட்டன. மேலும், குறிப்பாக இரண்டு கட்சிகளும் மாநிலங்களவை எம்.பி இடத்தையும் கேட்டுள்ளன.
ராஜ்யசபா சீட்: ராஜ்யசபா சீட் வேண்டும் என தேமுதிக, பாமக என இரு கட்சிகளுமே அடம்பிடிப்பது, அதிமுகவையும், பாஜகவையும் யோசிக்க வைத்துள்ளது. இதனால் இரண்டும் தரப்புக்கும் கூட்டணி முடிவு ஏற்படாத நிலை உள்ளது. இந்த நிலையில் தேமுதிக தனது லோக்சபா சீட் எண்ணிக்கை எதிர்பார்ப்பில் இருந்து இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, 3 லோக்சபா + 1 ராஜ்யசபா என்ற நிலைக்கு இரு கட்சிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாம். இதனால் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

பாமகவை பொறுத்துவரை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தைலாபுரம் தோட்டத்திலேயே சந்தித்து பேசியிருந்தார். மேலும் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி தொடர்பாக பேசியதாக தெரிகிறது.
பாமக ஓகே: இதில் பாமகவிற்கு கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த எண்ணிக்கை உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிக தயாராகிவிட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாமகவும், தேமுதிகவும் அதிமுக பக்கம் கரை ஒதுங்கி இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறதாம். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோற்றுப் போனார். ஆனாலும், முன்பே பேசிய கூட்டணி ஒப்பந்தப்படி அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது அதிமுக.
பாஜகவை நம்ப முடியாது: ஆனால், வாய்மொழியாக தேமுதிகவுக்கு தருவதாகச் சொன்ன ராஜ்யசபா சீட்டை பாஜக தரவில்லை. மேலும், அன்புமணிக்கு அமைச்சர் பதவி தரவும் பாஜக மேலிடம் விருப்பம் காட்டவில்லை. இதன் காரணமாகவே, மீண்டும் பாஜக ராஜ்யசபா சீட் தருவதாகச் சொன்னாலும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ராஜ்யசபா பதவி கிடைக்காமல் கூட போகலாம் என்ற எண்ணத்தில் பாமகவும், தேமுதிகவும் அதிமுக பக்கம் ஜூட் விட்டிருக்கிறார்களாம்.

இறங்கி வந்த தேமுதிக: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பிரேமலதா, மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் கூட்டணி நிலைப்பாடு குறித்த தேமுதிகவின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.
அதிமுக பக்கம் தஞ்சம்: அதன்பிறகு பிப்ரவரி 12ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி என்பது எனது கருத்தோ, கட்சியின் கருத்தோ கிடையாது. இது மாவட்ட செயலாளர்களின் கருத்து மட்டுமே." எனத் தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில் அவரது ஆஃபரை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், பாஜக, அதிமுக இரு கட்சிகளுமே பிரேமலதாவின் முடிவை ரசிக்காத நிலையில் தான் பிரேமலதா அவசர அவசரமாக மீண்டும் 14 லோக்சபா + 1 ராஜ்யசபா என்பது தமது முடிவு இல்லை எனத் தெரிவித்தாராம். இந்நிலையில், தேமுதிக, பாமக இரு கட்சிகளும் அதிமுக பக்கம் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications