அய்யா முகத்துல முழிக்க முடியல.. எடுத்தெறிந்து பேசும் ராமதாஸ்! அலறும் தைலாபுரத்து ஆதரவாளர்கள்! என்ன?
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது அரசியல் ரீதியாக கடுமையான குழப்ப நிலையை எதிர்கொண்டு வருகிறார். ஒருகாலத்தில் வன்னியர் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்ட பாமக, இப்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் சூழல், ராமதாஸை இக்கட்டான நிலையில் நிறுத்தி விட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. கட்சியின் நிறுவனர் என்ற மரியாதையும், நடைமுறை அரசியல் அதிகாரமும் தன் கையில் இருந்து மெதுவாக நழுவும் நிலையில்தான் ராமதாஸ் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது.
பாமக தற்போது ராமதாஸ் தலைமையிலான ஒரு அணியாகவும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தலைமையிலான இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டி வெளிப்படையாக வெடித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய முடிவு ராமதாஸுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
அன்புமணி நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, அவரின் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்த தேர்தல் ஆணையம், தேர்தல் ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரத்தையும் அன்புமணிக்கே வழங்கி கடிதம் அனுப்பியுள்ளது.

பாமக உட்கட்சி குழப்பம்
இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத ராமதாஸ், பாமக கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி தரப்பின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், தீர்ப்பு எப்படியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இந்த வழக்கின் முடிவே, பாமக எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ராமதாஸ் அன்புமணி மோதல்
இதற்கிடையில், "பாமக என்பது என்னிடம் மட்டுமே உள்ளது; கூட்டணி குறித்து பேச வேண்டுமென்றால் என்னுடன் தான் பேச வேண்டும்" என ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரை பொருட்படுத்தாமல், அன்புமணியை நேரடியாக அழைத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, ராமதாஸை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதை தனக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமதிப்பாகவே ராமதாஸ் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணி
இதன் பின்னணியில், திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ராமதாஸ் ஆராயத் தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை வெளிப்படையாக பாராட்டி, "ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்" என சான்றளித்ததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. ராமதாஸ் திமுக பக்கம் நகர்வதற்கு, விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அந்த எதிர்ப்பு பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ராமதாஸ் அரசியல் தனிமை
இதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்துடனும் ராமதாஸ் தரப்பு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை வெளியில் கூறிய சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் மீது, ராமதாஸ் கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் செய்திகள் வந்தன. இதனால், ராமதாஸ் எந்தப் பக்கம் இறுதியாக செல்லப் போகிறார் என்ற குழப்பம் மேலும் அதிகரித்தது.
ராமதாஸ்
இந்த சூழலில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்த சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகளுடன், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் நேர்காணல் நடத்தினார். இந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல அதிக தொகுதிகள் கிடைக்குமா என கேட்கிறீர்கள்; நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசியல் இயங்குகிறது என கூறிய ராமதாஸ், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
2026 சட்டமன்ற தேர்தல்
பொங்கல் பண்டிகைக்குள் கூட்டணி முடிவை அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த ராமதாஸ், தற்போது வரை எந்த இறுதி முடிவையும் அறிவிக்க முடியாமல் தவித்து வருவது, அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துவதாகவே பாமக தொண்டர்கள் கருதுகின்றனர். யார் பக்கம் போவது, யாரை எதிர்ப்பது என்ற முடிவை எடுக்க முடியாமல் ராமதாஸ் தவிப்பதாகவும், மருத்துவர் அய்யாவின் தற்போதைய அரசியல் நிலையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது என்றும் கட்சிக்குள் பலர் மனம் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications