கர்நாடகாவின் போக்கு ஆபத்தானது; நமது ஒற்றுமையை நிரூபிப்போம்; அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுக -ராமதாஸ்
சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து பேச தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கு மிகவும் ஆபத்தானது எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காவிரி ஆறு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று மீண்டும், மீண்டும் கூறிவரும் கர்நாடக அரசு, அதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து இந்த வாரஇறுதியில் சட்ட வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.

அனுமதியின்றி
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி, தமிழ்நாட்டிடம் உறுதியளித்த பிறகும் கூட அணையை கட்டியே தீருவோம் என்று அம்மாநில அரசு கூறுவதும், அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதும் இரு மாநில உறவை சீர்குலைத்து விடும். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அத்துமீறலை கர்நாடகம் கைவிட வேண்டும்.
Recommended Video

ஒற்றுமையாக
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம், சட்ட வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி புதுப்புது உத்திகளை வகுத்து வரும் நிலையில், தமிழக அரசும் கர்நாடகத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும். மேகதாது சிக்கலில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே அணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நிரூபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

வலியுறுத்தல்
எனவே, சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேகதாது அணை குறித்த வழக்கை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications