ராமதாஸ் பிறந்தநாளன்று.. பலே திட்டத்துடன் களமிறங்கும் அன்புமணி.. காய் நகர்த்தும் பாமக தலைவர்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளன்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாமகவில் தனது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அன்புமணி ஒரு பக்கம் பாமகவை கையில் எடுக்க முடிவு எடுத்து அடுத்தடுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் ராமதாஸ், நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சென்னை வந்த போதும் கூட ராமதாஸ், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

ராமதாஸ் ஆலோசனை
பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த குருமூர்த்தி, அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கூட முயற்சித்தனர். இதன் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் விரைவில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் இதுவரை கூட்டணி தொடர்பாகவும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
அன்புமணி அறிவிப்பு
அதேபோல் மகன் அன்புமணியை மீண்டும் பதவியில் நியமனம் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் தரப்பில் போட்டி பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே ராமதாஸ் 10 மாவட்டங்களில் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
வன்னியர் சங்க ஆதரவு
இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ராமதாஸ்க்கு வன்னியர் சங்க ஆதரவு இருப்பதும் அன்புமணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் பாமக நிர்வாகிகள் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தொண்டர்கள் ராமதாஸை மீறி செயல்பட முன் வரவில்லை என்று பார்க்கப்படுகிறது.
அன்புமணி நடைபயணம்
இந்த நிலையில் ராமதாஸ் பிறந்தநாளன்று அன்புமணி தனது நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 25ஆம் தேதி ராமதாஸின் பிறந்தநாளாகும். அன்றைய நாள் முதல் வட மாவட்டங்களில் அன்புமணி தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அன்புமணியின் நடைபயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு
அதேபோல் பாமகவில் தனது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையிலும் அன்புமணியின் நடைபயணம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அன்புமணியின் குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக பாமக நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications