ராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட காலமாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுமே நடைமுறைப்படுத்தவில்லை..
கடந்த சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை எதிர்கொண்டது திமுக. ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது.

திமுக தோல்வி
இதில் அதிமுகவின் கோரிக்கைக்குத்தான் ஆதரவு அதிகமாக கிடைத்தது. ஆம் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன அதிமுக ஆட்சியை பிடித்தது.,ஆனால் ஒரேடியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன திமுக தோல்வியை தழுவியது. திமுகவின் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பிரித்தது ஒரு பக்கம் என்றால், மதுப்பிரியர்களின் வாக்குகள் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

500 கடைகள் மூடல்
இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, பதவி ஏற்ற உடனே 500 டாஸ்மாக்குகளை மூட உத்தரவிட்டார். படிப்படியாக ஐந்து வருடத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகவும் உறுதி அளித்தார். டாஸ்மாக் வருமானத்தை வேளாண் உற்பத்தி, கனிம வளங்கள் உள்பட வேறு வகையில் எடுக்கவும் வழிவகைகளை உருவாக்கப்போவதாக கூறியிருந்தார். மதுக்கடைகளின் நேரத்தையும் குறைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016ம் ஆண்டே மரணம் அடைந்தார்.

பாமக கோரிக்கை
அதன்பிறகு அவரது வழியில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இன்னும் இரண்டு மாதத்தில் ஐந்து வருட அதிமுக ஆட்சி நிறைவு பெறுகிறது. இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மதுவிலக்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

மதுவிலக்கு நடைமுறை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுப்பாரா அல்லது தேர்தல் வாக்குறுதியாக புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications