Ramadoss Vs Anbumani: அன்புமணி ஆதரவாளர்களை நீக்கும் ராமதாஸ்! தைலாபுரத்தில் பாமகவினர் தர்ணா
கள்ளக்குறிச்சி: திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் வீடு முன்பு பாமகவினர் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் கிழக்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் பாமகவினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முற்றி வருகிறது. இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன் தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது பேசும் பொருளானது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவதாக அறிவித்தார். அதன்படி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
காலை நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மாலையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் வக்கீல் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே திமுக பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் அதிரடியாக நீக்கினார்.
மேலும் மயிலம் எம்எல்ஏவின் சிவக்குமாரின் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார். இதையறிந்த அன்புமணி, அதே மேடையில் திலகபாமாவுக்கு பொருளாளர் பதவியை வழங்கினார். அது போல் ராமதாஸால் நீக்கப்பட்டவர்களுக்கும் பதவியை வழங்கினார்.
பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட திலகபாமாவை நீக்க எனக்கோ வேறு யாருக்கோ அதிகாரம் இல்லை, இதுதான் கட்சியின் சட்ட விதி. இந்த விதிகள்தான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. மாவட்டச் செயலாளர்களையும் யாராலும் மாற்ற முடியாது என அன்புமணி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் சரவணனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக லோகநாதனை ராமதாஸ் நியமித்தார். அதை போல் கடலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணனை நீக்கி ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பாமகவினர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications