டிஜிபிடம் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் புகார்.. உரிமை மீட்பு பயணத்தை தடுங்க! பாமகவில் முடியாத மோதல்
சென்னை: அன்புமணி ‛உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் நாளை முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் தான் எனது அனுமதியின்றி பாமக கொடியை பயன்படுத்துவது மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. -
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ந்த பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் பாமக தொண்டர்கள் வருத்தமடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இருவரும் மோதிக்கொள்ளாத நிலையில் பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இப்போது புதிய பிரச்சனை உள்ளது. அதாவது ராமதாஸ்க்கு நாளை பிறந்தநாள் விழாவாகும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.
ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது மொத்தம் 100 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் இந்த திட்டத்தை அன்புமணி ராமதாஸ் வகுத்துள்ளார்.
நாளை திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம்தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நாளை திருப்போரூர், ஜூலை 26ல் செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஜூலை 27ல் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களுக்கு அன்புமணி ராமதாஸ் செல்கிறார்.
அதன்பிறகு ஜூலை 28ல் அம்பத்தூர், மதுரவாயில், ஜூலை 31ல் கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1ல் திருவள்ளூர், திருத்தணி, ஆகஸ்ட் 2ல் சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 3ல் ஆற்காடு, வேலூர், ஆகஸ்ட் 4ல் வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் ராமதாஸ் சார்பில் தமிழக டிஜிபிடம் பரபரப்பான புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவன தலைவர் என்ற முறையில் ராமதாஸ் இந்த புகாரை வழங்கி உள்ளார். அதில், அன்புமணி ராமாதாஸ் நாளை தொடங்கும் ‛உரிமை மீட்பு பயணம்' முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அனுமதியின்றி பாமக கொடியை பயன்படுத்துவது மற்றும் நிர்வாகிகளை சந்திக்க கூடாது. இதனால் பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மனுவால் அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் இடையேயான பிரச்சனை தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications