திமுக தான்.. அன்னதானம் கூட கொடுக்க விட மாட்றாங்க.. இவ்வளவு கெடுபிடியா.. கொந்தளித்த புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-ன் 51வது பிறந்தநாளையொட்டி கட்சியினரால் செய்யப்பட்டு வரும் அன்னதானத்தை கூட போலீசார் தடுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கெடுபிடி இருப்பதாக கூறியுள்ள புஸ்ஸி ஆனந்த், காவல்துறையினர் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்-ன் 51வது பிறந்தநாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் ஜனநாயகன் படத்தில் விஜய் போலீசார் அதிகாரியாக நடித்து வருவது தெரிய வந்துள்ளது.

ஜனநாயகன் கிளிம்ஸ்
இன்னொரு பக்கம் அந்தப் படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று பேசப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயகன் படக்குழு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பாக நலத்திட்ட உதவிகள், அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.
தவெக நலத்திட்ட உதவிகள்
அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், சேர்கள், டேபிள்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சில மாவட்டங்களில் தவெகவினர் பேனர் வைப்பதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அன்னதானத்திற்கு கெடுபிடி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். கோயில்களுக்கு வெளியில் கொடுக்கப்படும் அன்னதானத்தை கொடுக்க போலீசார் தடுக்கின்றனர்.
திமுகவினர் மீது அட்டாக்
அதனை வன்மையாக கண்டிக்கிறோம். இன்று மட்டுமல்லாமல் 365 நாட்களும் தவெக நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவில் கெடுபிடி அளிக்கப்பட்டு வருகிறது. தவெக விழாக்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதனை மக்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள். தவெகவினரை குறி வைத்து தாக்கியது திமுகவினர் தான் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications