காதலர் தினம்! வங்கக் கடலில் கடலை போட முடியாது! அன்பே ஆரூயிரேனு கொஞ்சவே கூடாது! காதலர்களே உஷார்!
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காதலர் தினம் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் காதலர்கள் நிரம்பி வழிவர். அந்த வகையில் சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் அதிகம் கூடுவர்.

குறிப்பாக மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் படகுக்கு கீழே மறைவாக உட்கார்ந்து கொள்வது, மூடிய கடையின் மேடைக்கு அடியில் உட்காருவது , ஒதுக்குப்புறமாக செல்வது என காதலர்கள் அத்துமீறுவது வாடிக்கையாக இருக்கும்.
இவர்கள் பொது இடங்கள் என்றும் பாராமல் இது போல் சில்மிஷங்களை செய்வதால் குழந்தைகளை அழைத்து கொண்டு கடற்கரைக்கு வர முடியாத நிலை உள்ளது. அது போல் பூங்காக்களிலும் இப்படித்தான் இருட்டான இடங்களுக்கு சென்று அங்கு அத்துமீறுகிறார்கள். இதனால் அந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வோர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
மேலும் பூங்காக்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வோருக்கும் இது சங்கடமாகவே இருக்கிறது. நல்ல நாளிலேயே இப்படி என்றால் காதலர்கள் தினம் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.
மெரினா, எலியட்ஸ், பாலவாக்கம் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க காதலர் தினம் என்பதே கலாச்சார சீர்கேடு என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. காதலர்கள் தினத்தன்று கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்வது, நாய்களுக்கு திருமணம் செய்வது போன்ற செயல்களை செய்து எதிர்ப்பை காட்டுகிறார்கள். மேலும் சிலர் அவர்களை மறைமுகமாக புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டவும் செய்கிறார்கள்.
காதலர்களை யாராவது வந்து மிரட்டினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் கூட காதலர்களாக உலா வருகிறார்கள். அவர்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக பெண் போலீஸார் பணியில் ஈடுபடுகிறார்கள்.
காதலர்கள் தினத்தன்று காதலர்கள் பரிசாக நிறைய பொருட்களை கொடுத்துக் கொள்வார்கள். இவை காதலர்களின் பொருளாதார தரத்தின் படி மாறுபடும். வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பொம்மைகள், நகை, செல்போன், ரோஜாப்பூக்கள், டிரஸ் உள்ளிட்ட விதவிதமான பொருட்களை வாங்கி பரிசாக அளிப்பர்.
ஸ்பிரே அடிக்கப்பட்டு பல வண்ணங்களில் விற்பனைக்கு குவிக்கப்படும் ரோஜாப்பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் பூக்களின் விலை உயரும். அந்த வகையில் இந்த ஆண்டும் 4 மடங்கு உயர்ந்துள்ளது. எல்லா வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
பனி, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு ரோஜா பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. அது போல் பொக்கேக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈசிஆர் சாலைகளில் அதி வேகத்தில் பைக்குகளில் பறக்கும் காதல் ஜோடிகளை கண்காணிக்கவும் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications