தமிழக அரசியல் கட்சிகளுக்கு.. புது செக்.. தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சுமார் 10% அதிகரித்து 68,467-லிருந்து 75,035 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

SIR கணக்கெடுப்பு இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிப் பட்டியலின்படி வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த செவ்வாய்க்கிழமை வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பட்டியலை இறுதி செய்ய, 234 தேர்தல் பதிவு அதிகாரிகளும், 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்தனர்.
1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள இடங்களில் புதிய மையங்கள், பிரிவுகள் மறுசீரமைப்பு, இட/பெயர் மாற்றம், வாக்குச்சாவடி இணைப்பு போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு இச்சீரமைப்பு நடந்தது. வாக்காளர்கள் 2 கி.மீ.க்கு அப்பால் பயணிக்காமல் வாக்களிக்கவும், தடை செய்யப்பட்ட வளாகங்கள் அல்லது கட்சி அலுவலகங்கள் 200 மீட்டருக்குள் இல்லாமல் வாக்குச்சாவடிகள் அமையவும் இது வழிவகுத்தது.
இந்த சீரமைப்புக்கு முன் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 6,648 புதிய மையங்கள் சேர்க்கப்பட்டு, 80 இணைக்கப்பட்டு, 2,509 மாற்றப்பட்டு, 7,752 இடங்களில் பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகரமாக 6,568 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.
டிசம்பர் 10 நிலவரப்படி, 99.99% கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 99.95% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மறுஆய்வு செய்ய 15 துறைகளுடன் கூட்டம் நடத்தினார்.தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர் கொத்தாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இறந்தவர்கள், இடமாறியவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இரட்டை வாக்கு கொண்டவர்கள் என்று 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 25.42 லட்சம் பேர் இறந்த காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. 5.18 கோடி பேர் இதுவரை SIR படிவங்களை பதிவேற்றி உள்ளனர்.
77 லட்சம் பேர் வரை படிவங்களை வழங்கவில்லை. இடமாறியவர்கள் 39.27 லட்சம் பேர், 8.97 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முயடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற காரணங்களுக்காக 3.32 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளே பல தொகுதிகளில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. டிசம்பர் 4-ல் முடியவிருந்த சரிபார்ப்புப் பணி, டிசம்பர் 11 வரை நடக்கும். டிசம்பர் 9-ல் வெளியாகவிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும். இதனால், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை போன்ற காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர். எனினும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க ஆணையம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications