பீகாரில் தேர்தல் வருவது இப்போதான் தெரியுமா.. விஜயை மாட்டிவிட்ட பிரசாந்த் கிஷோர்.. திமுகவினர் கிண்டல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர், திடீரென பின் வாங்கி இருக்கிறார். பீகார் தேர்தலில் தனது கட்சிக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறி பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகி இருக்கிறார். இதனால் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரையும் திமுகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் மிக முக்கியமான தேர்தல் வியூக வகுப்பாளர்களில் ஒருவர் பிரசாந்த் கிஷோர். 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பல்வேறு கட்சிகளுக்காகவும் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றி இருக்கிறார். 2021ல் திமுகவுக்காகவும் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார்.

தவெக தேர்தல் வியூக ஆலோசகர்
இதன்பின் பிரசாந்த் கிஷோரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் மூலமாக திமுக சொந்தமாகவே பென் என்ற நிறுவனத்தை தொடங்கி தங்களின் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் ஐபேக் நிறுவனம் மற்றும் ராபின் சர்மா ஆகிய 2 குழுக்கள் மூலமாக கருத்துக் கணிப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தவெகவுக்காக பிரசாந்த் கிஷோர் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
தவெக மேடையில் பிரசாந்த் கிஷோர்
பிப்ரவரி மாதம் நடந்த தவெக 2வது ஆண்டு தொடக்க விழாவில் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் மேடையை பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை என்று தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் தமிழ்நாட்டில் தவெகவுக்காக பணியாற்றி வந்தது. இந்த நிலையில் தவெகவுக்கான தேர்தல் பணிகளில் இருந்து பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகி இருக்கிறார்.
பீகார் தேர்தல்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. பிரசாந்த் கிஷோர் சொந்தமான ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். பீகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக பிரசாந்த் கிஷோர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக பிரசாந்த் கிஷோர் தவெக பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறி இருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் முடிவு
தவெகவுக்காக மீண்டும் பணியாற்றுவது தொடர்பாக நவம்பர் மாதத்திற்கு பின் பிரசாந்த் கிஷோர் முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்ட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை ஜெய்க்கும் குதிரை மீது மட்டுமே சவாரி செய்யக் கூடியவர். அவரது தொழிலில் 100 சதவிகிதம் வெற்றியை காட்ட வேண்டும் என்பதில் எப்போதும் தெளிவுடன் செயல்படுபவர்.
திமுகவினர் கிண்டல்
இதனால் பிரசாந்த் கிஷோர் தவெக பணிகளில் இருந்து விலகியதை வைத்து திமுகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தவெக குறித்து எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் காரணமாகவே பிரசாந்த் கிஷோர் விலகியதாகவும், அவருக்கு பீகாரில் தேர்தல் வருவது இப்போதுதான் தெரியுமா.. பிப்ரவரி மாதம் தெரியாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் விஜயை பிரசாந்த் கிஷோர் மாட்டிவிட்டு ஓடிவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications