தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சை மருந்துகளை அதிகம் வழங்க வேண்டும்.. பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆம்போடெசிரின் மருந்தைத் தமிழகத்திற்கு அதிகமாக ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை மாநிலத்தில் தற்போது மெல்லக் குறைந்து வருகிறது. அதேநேரம், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு, நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பு. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் உடல்நிலை பலவீனமாக இருக்கும் என்பதால் அவர்களை இந்த நோய் மிக எளிதாகத் தாக்குகிறது. இதற்கு ஆம்போடெரிசின்-பி IV மருந்து சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆம்போடெசிரின் மருந்தைத் தமிழகத்திற்கு அதிகமாக ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகம் முழுவதும் கரும்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் இந்த நோய்க்கான மருந்துகள் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே நிலைமையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் கருப்பு பூஞ்சை மருந்துகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" எனப் பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தன்னுடைய கோரிக்கையை ஏற்றுத் தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications