கொரோனாவைரஸ் எப்படி மிரட்டினால் என்ன.. பயமே தேவையில்லை.. டாக்டர் சுபா சார்லஸ் சூப்பர் ஆலோசனை
சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பயத்தை போக்குவது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் பலியாகி இருக்கின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
எது நடக்க கூடாது என்று பயந்தோமோ, அது நடந்துவிட்டதா.. 3வது ஸ்டேஜில் இந்தியா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட்
பயத்தை போக்குவது எப்படி?
இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸின் பயத்தில் இருந்து வெளியே வருவது எப்படி என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பயத்தை போக்குவது எப்படி என்ற கேள்விக்கு சுபா சார்லஸ் பதிலளித்துள்ளார்.
சமூக விலகல் முக்கியம்
அரசு சொல்வதை மக்கள் கேட்டாலே போதும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வைரஸ் ஒன்றும் நமக்கு புதிதல்ல. மனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸை தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் எனும் சமூக விலகல் முக்கியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்தாலே போதும் என்று கூறியுள்ளார்.
குவாரண்டைன் காலம்
மேலும் மனிதர்களிடம் இருந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே குவாரண்டைன் எனும் தனித்திருத்தல் அறிவுறுத்தப்படுகிறது. நம்மையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாக்கதான் இந்த குவாரண்டைன். நம்மை நாமே நேசிக்க இந்த குவாரண்டைன் காலம் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தம் வேண்டாம்
தனித்திருக்கும் காலத்தில் மக்கள் கோபப்படக் கூடாது. எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். பாஸிட்டிவான விஷயங்களை நினைத்து இந்த குவாரண்டைன் நேரத்தில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். இதில் கோபப்படவோ மன அழுத்தத்திற்கு ஆளாகவோ அவசியம் இல்லை என்றும் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறியிருக்கிறார்.