‛‛நேரில் வாங்க’’.. சூரப்பாவுக்கு பறந்த சம்மன்.. அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகாரில் அதிரடி
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் துணைவேந்தராக நியமனம் செய்தபோதே சர்ச்சைகள் எழுந்தன. கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்க கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இது விவாதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் இவரது பதவிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார்கள் எழுந்தன. அப்போது சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஆவணங்கள் அச்சடித்தல் உள்ளிட்ட விஷயங்களில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் கிளம்பின.
இதையடுத்து இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த முந்தைய அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தியது. மொத்தம் ரூ.2.92 கோடிக்கு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக இந்த குழு கூறியது.
இதையடுத்து சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விதிமீறல்கள், புகார்கள், ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது சூரப்பாவிடம் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சூரப்பாவுக்கு பொது கணக்கு தணிக்கை குழு சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது பணிக்காலத்தில் அவருடன் பணியாற்றிய அதிகாரிகள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த விசாரணையை தொடர்ந்து சட்டசபை பொது கணக்கு குழு சார்பில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications