புரட்டாசி.. உச்சத்தில் காய்கறிகள் விலை.. மீன்கள் பார்த்து சிரிக்குதே.. உற்சாகத்தில் அசைவ பிரியர்கள்
சென்னை: புரட்டாசி மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீன்களின் விலை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவம் தவிர்த்து சைவ உணவுக்கு மாறுவார்கள். பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் படையல் போட்டு வழிபடுவார்கள். புரட்டாசி மாதம் பிறந்து 6 நாட்கள் ஆகிறது. இன்றைய தினம் முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமானோர் விரதம் இருந்து இன்று பெருமாளுக்கு படையல் போட்டு மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

சைவ உணவு சாப்பிடும் மக்கள் இன்றைய தினம் காலையிலேயே காய்கறி கடைகளில் குவிந்துள்ளனர். இன்றைய தினம் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாக விற்பனையாகிறது. தக்காளி விலை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் அசைவ கடைகளில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது. மீன் சந்தைகளில் மீன்களின் விலை குறைவாகவே உள்ளதால் அசைவம் சாப்பிடும் மக்கள் ஆர்வத்தோடு அதிக அளவில் மீன்களை வாங்கிச்சென்றனர்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டன், சிக்கன், மீன் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இன்றைய தினம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது. இதனால் மீன்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ 800 ரூபாய்களில் இருந்து 1,200 வரையில் விற்கப்பட்டு வந்த பெரிய வஞ்சிரம் மீன் தற்போது 400 ரூபாய்க்கு கீழாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாறை மீன்கள் விலை குறைந்து, கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய வஞ்சிரம், நெத்திலி, வௌவால், கொடுவா, சங்கரா உள்ளிட்ட அனைத்து மீன்களின் விலையும் ஏறத்தாழ 50, 60 விழுக்காடுகள் வரையில் குறைத்து விற்கப்பட்டு வருகின்றன. மீன்களின் விலை குறைந்துள்ளதால் மீன்பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அசைவப்பிரியர்களுக்கு இந்த விலை குறைவு கொண்டாட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications