ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ஒரு கை பார்த்த ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தமிழக பிரசாரப் பயணத்திற்கிடையே, சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே, வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை Village cooking channel பதிவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
ஒரு கை பார்க்கலாம் என்ற முழக்கத்துடன் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்தார் ராகுல்காந்தி. திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் என ஐந்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி, பேக்கரியில் நுழைந்து டீ சாப்பிட்டார்.

கொங்கு மண்டலத்தை சுற்றி வந்த ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரம் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் பேசினார். வேனில் ஏறிய சிறுமியின் உடையை சரி செய்து செல்பி எடுத்து பலரது மனதை கவர்ந்தார். கரூரில் ஜோதிமணி எம்பி மாட்டுவண்டி ஓட்ட அசால்டாக பயணம் செய்தார்.
அங்குள்ள கிராம மக்கள் நடத்தும் Village cooking channel எனப்படும் யுடூயூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று அழகுத் தமிழில் பேசி வெங்காய ரைத்தாவை கலக்கினார். அப்போது வெங்காயம், தயிர், கல் உப்பு என்று சத்தமாக சொல்லிக்கொண்டே கலக்கி ஒரு வெங்காயத்தை எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று டேஸ்ட் பார்த்தார் ராகுல்காந்தி.
உங்க நிகழ்ச்சியை நான் யுடுயூப்பில் பார்த்திருக்கிறேன் நேரில் பார்க்க வந்திருக்கிறேன் என்று ராகுல்காந்தி ஆங்கிலத்தல் சொல்லவே அதை தமிழில் மொழி பெயர்த்தார் ஜோதிமணி எம்பி. அதைக் கேட்ட எல்லோரும் முகத்திலும் மகிழ்ச்சி அதிகரித்தது. சமையல் செய்தவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு சாதராணமாக பேசிய ராகுல் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.
தலைவாழை இலை பரப்பி, அவருக்கு காளான் பிரியாணி, கத்திரிக்கா குழம்பு, தயிர் வெங்காய ரைத்தா பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்ட ராகுல்காந்தி, மட்டன், சிக்கன் போட்டு இதே முறையில்தான் பிரியாணி செய்ய வேண்டுமா என்று சந்தேகம் கேட்டார்.
சாப்பிட்ட பிறகு சூப்பர் என்று சொல்லி அதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கவே, நல்லாயிருக்கு என்று சொல்ல, அதே போல நல்லாயிருக்கு சொல்லி கைகளை பிடித்து நன்றி சொன்னார்.
இந்த வீடியோவை Village cooking channel பதிவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ராகுல்காந்தி கடந்த பொங்கல் தினத்தன்று அவனியாபுரம் வந்து அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டார். தமிழ்நாட்டு உணவு ரொம்பவே பிடித்து விட்டது போல ராகுல்காந்திக்கு அதனால்தான் தனது பிரச்சார பயணத்திற்கு இடையே நம்ம ஊர் உணவுகளை ஒரு கை பார்க்கிறார் ராகுல்காந்தி.












Click it and Unblock the Notifications