கூடுவாஞ்சேரி டூ ஆவடி, சென்னை - கடலூர், ஈரோடு-பழனி.. பல ஆண்டு கனவு திட்டங்கள்.. ரயில்வே சூப்பர்
சென்னை: ரயில் பாதைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக தமிழக எம்எல்ஏக்களால் அடுத்தடுத்து விமர்சனங்களுக்கு ஆளான ரயில்வே அமைச்சகம், மாநிலத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 222 கோடியாக இருந்த ஒதுக்கீடு, அப்படியே டபுள் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஆண்டு 395.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
2025-26ம் நிதியாண்டில் மத்திய அரசு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு என ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33.467 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழி பாதை திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும், அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும், இரட்டை வழி பாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 222 கோடியாக இருந்த ஒதுக்கீடு, இந்த ஆண்டு 395.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒன்பது முக்கிய திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரம் வழியாக சென்னையை கடலூருடன் இணைக்கும் நீண்டகால வாக்குறுதியளிக்கப்பட்ட ரயில் இணைப்பு, ஸ்ரீபெரும்புதூர்-ஆவடி-கூடுவாஞ்சேரி ரயில் பாதை மற்றும் திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான ரயில் இணைப்பு ஆகிய பாதைகளும் அடங்கும்.
பல ஆண்டுகளாக, இந்த பாதைகளில் பல இழுபறியில் இருந்து வந்தன. இதனால் ரயில்வே வாரியம் 1,000 ரூபாய் ஒதுக்கி திட்டத்தை உயிருடன் வைத்திருந்தது. அதாவது தொழில்நுட்ப ரீதியாக அவற்றைக் கிடப்பில் போடவில்லை. ஆனால் அந்த வழித்தடங்களில் எந்த பணியும் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 90% திண்டிவனம்-நகரி மற்றும் தர்மபுரி-மொரப்பூர் வழித்தடங்களுக்கு மட்டுமே சென்றது.
இந்த ஆண்டு நிதி அதிகரிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் சில திட்டங்கள் முதன்முதலில் 2007 இல் அறிவிக்கப்பட்டவை ஆகும். தாம்பரத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், RTI மூலம் விரிவான விவரங்களை பெற்றார். அவருக்கு கிடைத்த தகவலின் படி, மதுரை-தூத்துக்குடி அருப்புக்கோட்டை (143 கி.மீ) வழித்தடத்திற்கு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு அரசு எதிர்த்ததால் மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகத் தவறாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது. மாநில போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் மறுப்பைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் அந்தக் கேள்வியை தவறாக கேட்டதாக அஸ்விணி வைஷ்ணவ் அடுத்த சில நாளில் தெளிவுபடுத்தினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக காகிதத்தில் மட்டுமே இருந்த நீண்ட காலமாக தாமதமான ஈரோடு-பழனி புதிய பாதைக்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டது. மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் புதிய பாதைக்கும் ரூ.52.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை முதல் புத்தூர் வரையிலான புதிய ரயில் பாதைக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி-விழுப்புரம் (160 கி.மீ) பிரிவுக்கு ரூ.200 கோடியும், சேலம்-கரூர்-திண்டுக்கல் (160 கி.மீ) மற்றும் ஈரோடு-கரூர் (65 கி.மீ) பாதைகளுக்கு தலா ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டத்திற்கு 55 கோடி ஒதுக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்துதலுக்காக மட்டும் தூத்துக்குடி மாவட்டம் மட்டும் 15 கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனறும். இந்த முழு திட்டத்திற்கும் 55 கோடி எப்படி போதுமானதாக இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், திண்டிவனம்-திருவண்ணாமலை திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த குறைந்தபட்சம் 95 கோடி தேவை என்றும், அதே நேரத்தில் 2025 பட்ஜெட்டில் 42.7 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீண்ட காலமாக தாமதமாகி வந்த 184.45 கி.மீ. நகரி-திண்டிவனம் பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புற மற்றும் சில நகர்ப்புற பகுதிகளை இணைக்கும். இந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி வழித்தடத்திற்கான இறுதி ஆய்வுகள் நடந்து வருகின்றன. நிலுவையில் உள்ள நடைமுறை அனுமதிகள் கிடைத்தவுடன் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications