டமடம.. டம் டமால் இடி சப்தத்துடன் 2ஆவது இன்னிங்ஸ்.. சென்னையில் மீண்டும் தொடங்கியது மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 45 நிமிடங்களாக கனமழை பெய்துவருவதால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த இரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தது. கடந்த 31, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சென்னையில் அளவுக்கதிகமான மழை பெய்தது.
இந்த மழையால் வடசென்னை தத்தளித்தது. கடந்த இரு தினங்களில் மட்டும் 300 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

படிப்படியாக மழை குறைவு
இந்த நிலையில் நேற்று மாலை படிப்படியாக மழை குறைந்தது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது, அதிகாலை முதல் சென்னையில் மழையே இல்லாமல் இருந்தது. இன்று காலையில் வெயில் எட்டி பார்த்தது. மக்கள் அவசர அவசரமாக துணிகளை துவைத்து போட்டு காய வைத்தனர்.

மேகக் கூட்டங்கள்
இந்த நிலையில் மேகங்கள் சென்னை டூ கடலூரில் இருந்து புதுவை, தென் தமிழகத்திற்கு சென்றுவிட்டதால் சென்னையில் கடந்த இரு தினங்களை போல் மழையின் அளவு இருக்காது என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதற்கு முன்பே லேசான குளிர்ந்த காற்று வீசியது.

45 நிமிடங்களில் கனமழை
பின்னர் சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்க தொடங்கிவிட்டது. 45 நிமிடங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையின் கே. கே. நகர் , வடபழனி, மேடவாக்கம், அனகாபுதூர், திநகர், கொடுங்கையூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் , கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, பாலவாக்கம், பள்ளிக்கரணை, ஈசிஆர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புதுவையில் மழை
தென் சென்னையிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் வடசென்னையை போல் பின்னி பெடலெடுக்கவில்லை. புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications