நேற்று வரை 25 கிலோ.. இன்று முதல் 26 கிலோ! திடீரென அரிசி பைகள் எடை கூடியது ஏன்.. அடடே இதுதான் காரணமா
சென்னை: அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்டவற்றுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதைத் தவிர்க்க புதிய முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் இப்போது ஒரே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் இருக்கிறது. பொருட்களின் அடிப்படையில் 4 வரி விதிகங்கள் அமல்படுத்தப்படுகிறது.
இதற்காகத் தனியாக ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் தான் அவ்வப்போது கூடி ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த பரிந்துரைகளை அளிக்கும்.

ஜிஎஸ்டி
இந்த கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளில் மாற்றங்களை அறிவிக்கும். அதன்படி தான் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் அரிசி, மக்காச்சோளம், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் 5% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. பெக் செய்யப்பட்டு பிரெண்ட் செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. பெக் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

வலியுறுத்தல்
அதேநேரம் 25 கிலோ வரையிலான பெக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களான அரிசியைக் கூட பொதுமக்கள் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது விற்பனையைப் பாதிக்கும் என்பதால், ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். இருப்பினும், மத்திய அரசு தனது ஜிஎஸ்டி தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெறவில்லை.

புதிய முயற்சி
எனவே, ஜிஎஸ்டியை தவிர்க்க வியாபாரிகள் இப்போது புதிய யுக்தியைக் கையாள தொடங்கி உள்ளனர். அதாவது 25 கிலோ அரிசி வரை மட்டுமே ஜிஎஸ்டி என்பதால், 26 கிலோ அரிசியை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளனர். நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆலைகள் 25 கிலோ அரிசிக்குப் பதிலாக 26 கிலோ பைகளையே உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளனர். இது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிவித்த 25 கிலோவுக்கு மேலே உள்ளதால், இதற்கு ஜிஎஸ்டி தேவையில்லை.

எப்படி
அதாவது முன்பு ஜிஎஸ்டி அறிவிப்பின் கீழ், 25 கிலோ அரிசி 1000 ரூபாய் என்றால், அத்துடன் ஜிஎஸ்டி தொகையாக 5% சேர்த்து 1050 ரூபாயாகப் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அதேநேரம் 26 கிலோ அரிசியை உற்பத்தி செய்யும் போது, அது மத்திய அரசு அறிவித்த வரம்பிற்கு மேலே உள்ளதால் ஜிஎஸ்டி தேவையில்லை. இதனால் 26 கிலோ அரிசிக்கான தொகையை மட்டுமே வசூலித்தால் போதும்.

ஆலைகள்
அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் எடையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில ஆலைகள் 25 கிலோவுக்குப் பதிலாக 30 கிலோ பைகளையும் உற்பத்தி செய்கின்றனர். இது மத்திய அரசின் அறிவிப்பை ஓட்டியே இருப்பதால், இது சட்டத்திற்கு உட்பட்டது தான். மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாலும், ஜிஎஸ்டி பைலிங் செய்ய வேண்டிய வேலை இதில் இருக்காது என்பதாலும் வணிகர்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஏழை குடும்பங்கள்
இந்த பொருட்கள் சில்லறையாக விற்பனை செய்யப்படும்போது ஜிஎஸ்டி இல்லை. அதேநேரம் 25 கிலோவுக்குக் கீழ், அதாவது 5,10, 20 கிலோ பைகளில் இவை விற்பனை செய்யப்படும்போது அதற்கு ஜிஎஸ்டி போடப்படும். பொதுவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சிறிய பைகளையே வாங்குவார்கள் என்பதால் அது அவர்களுக்குப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications