ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்! களைகட்டும் கனிமொழி இல்லம்! குவியும் விசிட்டர்கள்!
சென்னை: திமுக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் சிஐடி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தார்.
ஸ்டாலினை மனதார வாழ்த்திய ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையிலும் அது குறித்த எந்த ரியாக்ஷனையும் வெளிப்படுத்தவில்லை.
இதனிடையே திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் சிஐடி காலனி இல்லத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

திமுக பொதுக்குழு
திமுக பொதுக்குழுவில் 2-வது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கும் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லம் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்தின் முன் நின்று வணங்கிவிட்டு தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

ராஜாத்தி அம்மாள்
வயது மூப்பு காரணமாக தயாளு அம்மாள் மிகவும் உடல் நலிவுறுள்ளதால் அந்த படத்தை திமுக தரப்பு பகிரவில்லை. இதனிடையே அங்கிருந்து நேராக சிஐடி காலனி இல்லம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும், ராஜாத்தி அம்மாளின் உடல்நலம் பற்றியும் அக்கறையுடன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

கனிமொழி எம்.பி.
இதனிடையே மகள் கனிமொழிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட போதும் அது குறித்த எந்த ரியாக்ஷனையும் ராஜாத்தி அம்மாள் ஸ்டாலினிடம் வெளிப்படுத்தவில்லை. செரிமான மண்டல பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் ராஜாத்தி அம்மாள் அண்மையில் கூட சிகிச்சைக்காக ஜெர்மன் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் சிஐடி காலனி இல்லத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

3 நாட்கள்
குறைந்தது இன்னும் 3 நாட்களாவது கனிமொழி எம்.பி. வாழ்த்து மழையில் நனைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்திய தலைமைக்கழகம் பிறகு அறிவிக்கப்படும் போது மாவட்ட வாரியாக வந்து சந்தித்து வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications