Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்பட்டது பிறை.. நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31 ஆம் தேதி) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இன்று மாலை, புனித நோன்பு மாதமான ரமலான் மாதத்தின் இறுதியில் பிறை தென்பட்டதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், நாளை (மார்ச் 31, 2025) தமிழக முழுவதும் ரமலான் (ஈதுல் ஃபித்ர்) பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

Ramadan tamil nadu Ramzan

நாளை தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு, கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். இந்நிலையில், இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் இன்று தொடங்கியதைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ரமலான் வாழ்த்துச் செய்தியில், "அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

"எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்" என்று தன் அன்பர்களுக்குக் கூறியவர் அண்ணல் நபிகள் பெருமான்.

பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக்கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார். "தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு" என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.

மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadan tamil nadu Ramzan

எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி, தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்'' என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+