ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என எடப்பாடி சொல்லட்டும்.. அமைச்சர் கொடுத்த ரிப்ளை!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், அப்படியென்றால் உண்மையான குற்றவாளி யார் என அவரே சொல்லட்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம். அதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

யார் யார் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனரோ, புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான குற்றவாளி யார் என தெரிந்தால் சொல்லட்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் ரகுபதி, "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருகிறார். வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது என சொல்ல முடியாது. ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தை பொருத்தது, நீதிமன்றத்ததின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே கடந்த ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா என பல்வேறு கட்சியினரும் அடக்கம்.
எடப்பாடி பழனிசாமி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும் கருதுகிறார்கள். எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களது சந்தேகத்தைப் போக்குவது இந்த அரசின் கடமை. உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமானால், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications