அடிபட்டு செத்துப் போயிருவ..விஜயை குறிவைத்த சீமான்! கடுகடுப்பில் நாம் தமிழர் நிர்வாகிகள்! என்னாச்சு?
சென்னை: விஜய் அரசியல் வருகைக்குப் பிறகு பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் பல நிர்வாகிகள் தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக விலகி வரும் நிலையில் தற்போது விஜயை குறி வைத்து சீமான் பேசி வருவதால் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தவெக உள்ளிட்ட கட்சிகளை நோக்கி படையெடுத்து வருவதாக கூறுகின்றனர்.
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக இருக்கிறது. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக இடையே வார்த்தை போர் மூண்டு இருக்கிறது. இது ஒரு புறமிருக்க அதிமுகவை தவிர நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை திமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கட்சித் தொண்டர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒரு படி மேலே போய் ஒருமையில் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். "ஒன்னு அந்த பக்கம் நில்லு.. இல்லேன்னா இந்த பக்கம் நில்லு நடுவுல நின்னா அடிபட்டு செத்துப் போயிருவ" என பேசியதோடு, " நான் தமிழ் பெற்றோருக்கு பிறந்தவன் என பேசியது விஜய் கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனால் தவெக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சொந்த கட்சிக்குள்ளேயே சீமானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு சதவீதம் கிடைத்ததோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் அதற்குப் பிறகாக சீமானின் செயல்பாடுகள் அதல பாதாளத்திற்கு போனதாக கூறுகின்றனர்.
மேலும் சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி உள்ளிட்ட பலர் வெளியேறினர், ஏற்கனவே காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியிட்ட நிலையில், அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து சீமான் தற்போது முடிவு செய்திருப்பதாகவும், பணம் இருப்பவர்களுக்கே பதவி என்ற நிலைக்கு சீமான் சென்று விட்டதாகவும் குடும்ப அரசியல் செய்வதாக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
மேலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பிறகு சீமானின் பேச்சில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு முன் எனது தம்பி எனது தம்பி என பேசி வந்த சீமான் மாநாட்டுக்கு பிறகு விஜயை குறி வைத்து பேசி வருகிறார். இதனால் திமுக, பாஜகவினர் போலவே நாம் தமிழர் கட்சியினர் இருப்பதாக கூறுகின்றனர். அக்கட்சியினர். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விஜய் ரசிகர்களாகவும் அஜித் ரசிகர்களாகவும் தான் இருக்கின்றனர்.
ஆனால் சீமான் விஜயை நேரடியாகவும் ஒருமையிலும் தாக்கி பேசுவது பல நிர்வாகிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நாகையில் ஒட்டுமொத்தமாக ஏராளமான நாம் தமிழர் தொண்டர்கள் விஜய் கட்சியில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இளம் நிர்வாகிகள் விஜய் கட்சி பக்கம் சாய முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் இருவர் பாஜகவுக்கு தாவ இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது கட்சித் தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. ஆரோக்கிய அரசியல் செய்வதை விட்டுவிட்டு தினமும் செய்தியாளர்களை சந்தித்து ஏதாவது ஒரு தலைவரை திட்டுவது நல்ல அரசியலுக்கு அழகல்ல என்கின்றனர் நம்மிடம் பேசிய சில நாம் தமிழர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications