'முகத்தில் மாஸ்க், தலையில் தொப்பி..' உதயநிதி அலுவலகத்தில் ரூ 1 லட்சம் ஆட்டையைபோட்ட நபர் கைது! வீடியோ
சென்னை: சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து ஒருவர் ஒரு லட்ச ரூபாயைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின்னர், உதயநிதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர்.
அதன் பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

உதயநிதி
அந்தத் தேர்தலில் அவர் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். தேர்தலில் வென்றவுடன் தொகுதி முழுக்க சென்று மக்களை சந்தித்த உதயநிதி, அதன் பின்னரும் கூட அடிக்கடி தனது தொகுதி மக்களைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட போது கூட, சேப்பாக்கம் தொகுதியில் பல சிறப்பு வேக்சின் முகாம்களை அவர் தொடங்கி வைத்திருந்தார்,

அலுவலக நிகழ்ச்சி
இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்குப் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாறன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்குப் பரிசுகள் வழங்கினர். அந்தச் சமயத்தில் நிர்வாகிகளுக்கு வழங்க சேப்பாக்கம் வட்ட செயலாளர் வெங்கடேசன் தனது பாக்கெட்டில் 1 லட்சம் ரூபாயை வைத்திருந்தார்,

பணம் மாயம்
அந்த நிகழ்ச்சியின் போது நிர்வாகிகளுக்குப் பரசு அளிக்க அவர் தனது பாக்கெட்டை பார்த்த போது அதில் ஒரு லட்ச ரூபாய் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். திமுக இளைஞரணி செயலரும் தொகுதி உறுப்பினருமான உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பணம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமன்ற அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

தொப்பி அணிந்த மர்ம நபர்
அந்த வீடியோவில் தொப்பி அணிந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பணத்தை வைத்திருந்த வெங்கடேசன் அருகில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறார். பின்னர், உதயநிதி கிளம்பும் சமயத்தில் ஏற்பட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் வெங்கடேசனின் பாக்கெட்டில் கையைவிட்டு ரூ 1 லட்சத்தைத் திருடுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார்.

ஒருவர் கைது
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து முதலில் விசாரணையைத் தொடங்கினர். தொப்பி அணிந்த அந்த மர்ம நபர் தான் பணத்தைத் திருடியது உறுதியானதால் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடத்தினர். இந்தச் சூழிலில், இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(52) என்பவரைக் கைது செய்தனர். இவரிடமிருந்து 20 ஆயிரம் பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே பாஸ்கர் மீது வீடு புகுந்து திருடுதல் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications