நன்றியய்யா நன்றி.. அக்கவுண்டுக்கு வந்த ரூ.1000! திமுகவின் திட்டத்தை நிறுத்தாத விஜய்! ஹேப்பியோ ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை மீண்டும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் தொடருமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது பணம் வரவு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்படாது என பேசியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் "புதுமைப்பெண்" மற்றும் "தமிழ்ப்புதல்வன்" திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கும், பின்னர் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.

இந்த திட்டம் பொருளாதார வசதி குறைவான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது. குறிப்பாக கல்லூரி கட்டணம், பயணச் செலவு, புத்தகங்கள் வாங்குதல் உள்ளிட்ட அன்றாட கல்விச் செலவுகளுக்கு இந்த தொகை பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முந்தைய அரசின் நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் எழுந்தது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்படுமா என்ற அச்சம் பலரிடமும் இருந்தது.
இதுதொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய நலத்திட்டங்களை புதிய அரசும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடரும் என்று உறுதியளித்தார்.
அந்த அறிவிப்புக்குப் பிறகு தற்போது புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். புதிய அரசு நலத்திட்டங்களை தொடர்ந்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு என்று கல்வியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் இந்த மாதாந்திர உதவித்தொகை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது தொடர்ந்து ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications