'தமிழ்நாட்டில் மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரிக்கிறது'.. சென்னையில் ஆர்எஸ்எஸ் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது என்று சென்னையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை தட்டிகேட்கும் பாஜகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
'நோ ஃபோட்டோ.. நோ டிரோன்..' ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தை சுற்றி கடும் கட்டுப்பாடுகள்.. திடீர் உத்தரவு ஏன்
ஆர்எஸ்எஸ் அமைப்பினர்
மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் மாணவியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில்தான் தமிழகத்தில் மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.
பாஜகவினர் மீது பொய் வழக்கு
சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன்,சென்னை மாவட்ட இந்து முன்னணி தலைவர் இளங்கோவன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 2 பெண்கள் கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண்கள் மீது புகார் கொடுத்த பாஜக நிர்வாகி கணேஷ் பாபு மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
அனுமதியின்றி மதப்பிரச்சாரம் செய்ய கூடாது
குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி மதப்பிரச்சாரம் நடத்தக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதுரை தெற்கு வாசலில் ஒரு இடத்தை கிறிஸ்தவ அமைப்பு வாடகைக்கு எடுத்து, அங்கு மதப்பிரச்சாரம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இதனை எதிர்த்த ராசா கண்ணு உள்ளிட்ட 6 பேரை பொய் வழக்குகளில் காவல்துறை கைது செய்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம்
தொடர்ந்து பேசிய அவர்கள், ' தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது. அதனை கேள்வி கேட்கும் இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகின்றனர். பொய் வழக்குப் போடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேச தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மின்னஞ்சல் மூலம் நேரம் கேட்டுள்ளோம்' என்று தெரிவித்தனர்.