இனப்படுகொலை என உதயநிதி சொல்லவில்லை.. முழு பேச்சையும் அறியாமல் பிரதமர் பேசுவதா? கேட்கிறார் முதல்வர்
சென்னை: இனப்படுகொலை என்று உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதியின் முழு பேச்சையும் கேட்காமல் பிரதமர் மோடி பேசலாமா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி, எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இதனிடையே தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, முன்னாள் நீதிபதிகள், எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர். சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசியது தொடர்பாக உதயநிதிமீது உத்தர பிரதேச காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே சனாதனம் குறித்து தவறாகயாராவது பேசினால் அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சனாதனம் குறித்த உண்மைகளை அறிந்துகொண்டு, எதிர்க்கட்சி தலைவர்களை மத்தியஅமைச்சர்கள் எதிர்கொள்ளவேண்டும். அதேநேரம், அளவுடன்எதிர்வினையாற்றுங்கள் என்று கூறியுள்ள மோடி, வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளஉண்மை தகவலை மட்டும் பேசுங்கள். சனாதன சர்ச்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதியின் முழு பேச்சையும் கேட்காமல் பிரதமர் பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இனப்படுகொலை என்று உதயநிதி தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒரு இடத்தில் கூட உதயநிதி சொல்லவில்லை. இனப்படுகொலை செய்யச்சொன்னதாக உதயநிதி மீது பாஜகவினர் பொய் பழியை கூறுகின்றனர். பாஜகவினர் கூறுவதை பிரதமர் ஏற்றுக்கொள்கிறாரா? என்று கேட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்தான் என்று உதயநிதி சொன்னாரே தவிர, மத நம்பிக்கையை யார் மனதையும் காயப்படுத்தவில்லை.
குழந்தை திருமணத்தை ஆளுநரை ஆதரிக்கிறார், குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆளுநரே தடை போடுகிறார். இந்தியா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது பாஜக. திமுக மீது களங்கம் கற்பித்து அரசியல் செய்ய நினைத்தால் பாஜக அந்த புதைகுழியில் பாஜக மூழ்கிப்போகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications