முதலில் மயக்கம் வந்தது! அப்பல்லோ அருகே நினைவு வந்தது.. 22.09.2016ல் நடந்தது என்ன? சசிகலா வாக்குமூலம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியிலிருந்தே அக்காவுக்கு காய்ச்சல் இருந்தது. 21 ஆம் தேதி காய்ச்சல் அதிகரித்தது. அப்போது என்னிடம் பிடிவாதம் பிடித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்ட மெட்ரோ ரயில் விழாவுக்கு அக்கா சென்றார்.
அந்த விழாவின் போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு விழா முடிந்தும் நேராக போயஸ் தோட்டத்திற்கு வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் சரியாகிவிட்டது என்றார். பின்னர் செப்டம்பர் 22 ஆம் தேதி அக்கா மிகவும் சோர்வாக இருந்தார். அதனால் நான் மிகவும் கலக்கமடைந்தேன். அந்த அளவுக்கு அக்கா ஒரு போதும் தளர்வடைந்ததே இல்லை. மருத்துவமனைக்கு வாங்க அக்கா போகலாம். அங்கு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அக்காவை கட்டாயப்படுத்தினேன்.

கோபமடைந்த ஜெயலலிதா
ஆனாலும் அக்கா நான் தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும். மருத்துவமனைக்கு போனால் அட்மிட் ஆக சொல்லுவார்கள். அதெல்லாம் வேண்டியதில்லை என என்னிடம் கோபமாக சொன்னார். நான் எவ்வளவோ கேட்டும் கூட அக்கா மருத்துவமனைக்கு போக ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் சிறிது நேரத்தில் அக்காவுக்கு காய்ச்சலும் குறைந்தது. அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு 9 மணிக்கு போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.

அறையில் நடந்தது என்ன
இந்த நிலையில் 9.30 மணிக்கு நான் அக்காவுடன் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்தேன். அப்போது படுப்பதற்கு முன்பாக எப்போதும் போல பல் துலக்க குளியலறைக்கு மெதுவாகச் சென்றார். அங்கு அக்கா பல்துலக்கி மவுத் வாஷ் செய்துவிட்டு அங்கிருந்தபடியே சசி மயக்கமாக இருக்கிறது இங்கே வா என்றார். நான் உடனே குளியலறைக்குள் சென்று அக்காவை அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்து நானும் அருகில் உட்கார்ந்தேன். அப்போது திடீரென அக்கா மயங்கிய நிலையில் என் தோளில் சாய்ந்தார். அப்போது டாக்டர் சிவக்குமார் அக்காவின் அறைக்குள் வந்தார்.

பதறினேன்
நான் பதற்றத்துடன் அக்காவை தாங்கி பிடித்துக் கொண்டே காலால் அருகிலிருந்த டிராலியை இழுத்து அதிலிருந்த மணியை பலமாக அழுத்தி யாராவது வாங்க என உரத்த குரலில் அழைத்தேன். டாக்டர் சிவக்குமாரும் அக்காவின் கைகளையும் கால்களையும் தேய்த்து உஷ்ணமாக்கிக் கொண்டே உடனடியாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டியின் கணவர் விஜயகுமார் ரெட்டியை தொடர்பு கொண்டு, முதல்வர் திடீரென மயங்கி விட்டார். அவசர மருத்துவ உதவி தேவை உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்தார்.

சப்தமிட்டேன்
நான் அக்கா அக்கா என அழைத்ததும் அவர் கண் திறக்கவில்லை. நான் போட்ட சப்தத்தில் கீழ் தளத்திலிருந்து அக்காவின் தனி பாதுகாவல் அதிகாரிகள் வீரப்பெருமாள், கந்தசாமி, அக்காவின் கார் ஓட்டுநர் கண்ணன் உள்ளிட்டோர் உடனே ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் முதல் தளத்திலிருந்து கீழ்த்தளத்தில் அக்காவை கொண்டு வர முயற்சித்தோம். அப்போது சுமார் 10 முதல் 15 நிமிடத்திற்குள்ளாக இரு அப்பல்லோ மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் அக்காவை ஏற்றிக் கொண்டு நானும் சிவக்குமாரும் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவிற்கு சென்றோம்.

கண் விழித்து பார்த்தார்
கிரீம்ஸ் சாலை அருகே வண்டி திரும்பிய போது அக்கா சட்டென கண் விழித்து என்னை பார்த்து எங்கிருக்கிறேன் என்றார். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது. அப்பல்லோவுக்கு போய்ட்டு இருக்கோம், கவலைப்படாதீங்க என்றேன், என் கையை அவரது விரல்களால் இறுக்கமாக பிடித்துக் கொண்டார் . பின்னர் அவருக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தார். அடுத்த நாள் அவரை ஸ்கேனுக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்த தனி பாதுகாவலர்கள் வீரப்பெருமாள் உள்ளிட்டோரிடம் எனக்கு ஒன்றும் இல்லை. 3 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்துவிடுவேன், கவலைப்படாதீர்கள் என சொன்னதாக சசிகலா தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications