SBI அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த ‘ரகசிய’ கட்டண மாற்றத்தை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் போது சில புதிய நடைமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்... நாம் அவசர தேவைக்காக ஒருவருக்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஐ.எம்.பி.எஸ்(IMPS) என்ற முறையைப் பயன்படுத்துவோம். இந்த முறையில் பணம் அனுப்பினால், அடுத்த நொடியே அந்த நபர் கையில் பணம் கிடைத்துவிடும். இப்போது இந்தச் சேவையில் தான் சிறிய மாற்றங்களை வங்கி கொண்டு வந்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
25,000 ரூபாய்க்கு குறைவாகப் பணம் அனுப்பினால், அதற்காக வங்கி ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்காது. இது சிறுதொழில் செய்பவர்களுக்கும், அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்புபவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.

எஸ்பிஐ வங்கி
ஆனால், நீங்கள் அனுப்பும் தொகை 25,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதற்குச் சிறிய தொகையைச் சேவைக்கட்டணமாக வங்கி எடுத்துக் கொள்ளும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பினால் சுமார் 5 ரூபாயும், அதற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பினால் சுமார் 10 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் அரசு விதிக்கும் ஜிஎஸ்டி வரியும் மிகச்சிறிய அளவில் சேர்க்கப்படும். பிப்ரவரி 15, 2026 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது எப்படி?
வங்கிக் கிளைக்கு சென்று வரிசையில் நிற்காமல், உங்கள் கையில் இருக்கும் செல்போன் மூலமாகவே பணத்தை அனுப்ப நிறைய பல வழிகள் உள்ளன. அதில் மிக எளிமையானது YONO எனப்படும் வங்கியின் அதிகாரப்பூர்வமான செயலியைப் பயன்படுத்துவது.
முதலில் உங்கள் மொபைலில் வங்கியின் செயலியைத் திறந்து, யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீட்டைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இதைப் பதிவு செய்த பிறகு, பாதுகாப்பு கருதி உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள்ளீடு செய்தால் அந்த நபர் உங்கள் கணக்கில் "பணம் பெறுபவர்" பட்டியலுக்குள் வந்துவிடுவார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
இதன்பிறகு, நீங்கள் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அவசரமாக பணம் சென்றடைய வேண்டும் என்றால் "ஐஎம்பிஎஸ்" முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
இல்லாவிட்டால் சிறிது நேரம் கழித்து சென்றால் பரவாயில்லை என்றால் நெப்ட் முறையைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் போன்ற முறைகளில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பினால் பெரும்பாலும் எந்தக் கட்டணமும் கிடையாது. இது தவிர, இப்போது நாம் கடைகளில் பயன்படுத்துவது போல யூபிஐ மூலமாகவும் மிக எளிதாகப் பணம் அனுப்பிவிடலாம்.
நீங்கள் பெரிய தொகையை அனுப்பும்போது மட்டும், எந்த முறையில் கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். வங்கிக்கு நேரில் சென்று படிவம் நிரப்பி பணம் அனுப்புவதை விட, செல்போன் மூலம் அனுப்புவது நேரத்தையும் மிச்சப்படுத்தும், சில நேரங்களில் கட்டணத்தையும் குறைக்கும்...












Click it and Unblock the Notifications