சோகம்.. ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர் மாரடைப்பால் மரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை
சென்னை: மயிலாடுதுறையில் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள முதல்வர் மு.கஸ்டாலின், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளதோடு, நிதி உதவியையும் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மண்டல அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று இருந்தனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சரவணன் - நித்தியா தம்பதியினரின் மகனான ரிஷி பாலன்(வயது 17) இந்த போட்டியில் பங்கேற்று இருந்தார்.

அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிபாலன், காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் போட்டியில் பங்கேற்று இருந்த போது திடீரென சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ரிஷிபாலனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் மாணவர் ரிஷிபாலன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர். விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சென்ற மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவியையும் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications