ஷவர்மாவால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அமைச்சர் விவரம் தெரிந்து தான் பேசுகிறாரா? பொங்கும் எஸ்.டி.பி.ஐ!
சென்னை: ஷவர்மா பற்றி அமைச்சர் சுப்ரமணியன் விவரம் தெரிந்து தான் பேசுகிறாரா என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான தெஹ்லான் பாகவி வினவியுள்ளார்.
வேறு எந்த உணவுகளினாலும் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட தில்லையா ? அப்படி நடக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்படுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிடுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஷவர்மா பிரியர்களுக்கு ஷாக்! தடைசெய்ய முடிவெடுத்தது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியனின் முக்கிய விளக்கம்
ஷவர்மா கடைகள்
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்" சவர்மா " கடைகளை சோதனை செய்வதும், அபராதம் விதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
குடியாத்தம் உட்பட சில இடங்களில் ஒரு படி மேலேசென்று சவர்மா கடைகளுக்கு தடைவிதிக்கும் நிகழ்வுகளும், இன்னும் பல ஊர்களில் சீல் வைக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
அரசுக்கு கேள்வி
அரசின் அனுமதியோடு தான் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை அரசு
தெளிவுபடுத்த வேண்டும்.
உணவகங்களில் உணவுகள் தரமாகவும் சுகாதாரமும் விற்கக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.இதில் சவர்மா விதிவிலக்கானதல்ல.
அதேநேரம் சவர்மா மட்டும்தான் ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்கிற கேள்வியை அரசை நோக்கி முன் வைக்கவேண்டிய
அவசியம் ஏற்படுகிறது.
ஆயிரக்கணக்கில் கடைகள்
கடந்த பத்தாண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு நாடுகளின் உணவுகள் விற்பனைசெய்யும் கடைகள் பரவலாகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக சவர்மா கடைகளும் நாடு முழுவதும் அதிகரித்துவருகின்றன. நாடு முழுவதும்
பல்லாயிரக்கணக்கில் செயல்படும் சவர்மா கடைகளில் சில நாட்களுக்கு முன்பு
கேரளாவில் ஒரு மாணவி உயிரிழந்த நிகழ்வும் அதைத்தொடர்ந்து திருவாரூர் ஒரத்தநாடு அருகே சில மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வையும் தவிர்த்து வேறு எங்கும் சவர்மா உண்டதனால் மக்கள்பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஆரோக்கியம் முக்கியம்
பொதுவாக சுக- துக்க நிகழ்வுகளிலும், உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவுகளில் ஏதாவது சிலசந்தர்ப்பங்களில் ஏதாவது காரணங்களினால் உணவு ஒவ்வாமை
ஏற்படும்நிகழ்வு வாடிக்கையாக இருந்துவருகிறது. ஆனால் ஷவர்மா விடயத்தில் மாத்திரம் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்ன? நாம் இந்தகேள்வி எழுப்புவதால் ஆரோக்கியமற்ற உணவுகளை கண்டும் காணாமல் விட்டுவிடவேண்டும்.மக்கள் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை. என்பதல்ல.
சைவ உணவு
மாறாக ஒரு குறிப்பிட்ட உணவை நோக்கி ஒரு குறிப்பிட்ட சாரார் விற்கும் உணவை
நோக்கி இத்தகைய நடவடிக்கைகளை விரைவுபடுத்தபடுகிறதா என்பதே நமது கேள்வி?
வேறு எந்த உணவுகளினாலும் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட தில்லையா ? அப்படி நடக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்படுகின்றதா?
சைவ உணவால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அந்த உணவை வீசி எறிவதோடு
நடவடிக்கைகள் நின்றுவிடுகின்றன .
Recommended Video
அமைச்சர் பேசுவது
அசைவ உணவினால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அசைவ உணவினால் மட்டும்தான் பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.வெறுப்பு அரசியலை தவிர இதற்கு வேறு என்னபெயர்?
சவர்மா குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பேசும்போது சவர்மா உணவு குளிர் பிரதேசத்தில் மக்களின் உணவு எனவும் நமது தட்ப வெப்ப சூழலுக்கு இது ஏற்றதல்ல எனவும் என்று அடிப்படையற்ற ஒரு தகவலை பதிவு செய்ததாக ஊடங்களில் வெளிவந்துள்ளது.
விவரம் தெரியுமா?
அவர் விவரம் தெரிந்துதான் பேசி இருக்கிறாரா? என்பது நமக்குத் தெரியவில்லை.காரணம் கடும் வெப்பம் சுட்டெரிக்கும் பாலைவன நாடுகளில் அதிகமாக விற்பனை செய்யும் உணவுதான் சவர்மா! ஒரு உணவுக்கு எதிராக எடுக்கப்படும்
நடவடிக்கையினால் அந்த உணவு விற்கப்படும் ஆயிரக்கணக்கான உணவகங்கள், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அவர்களின் வாழ்வாதாரம், எதிர்காலம் இவற்றையும் கருத்தில்கொண்டு அரசு மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையெனில் அது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படும்.
இஸ்லாமியர்களின் உணவகங்கள்
ஏற்கனவே இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்கள் அவர்கள் சார்ந்த உணவுகள் மீதான வெறுப்பு அரசியல் சதித்திட்டத்துடன் முன்வைக்கப்படும் இக் காலகட்டத்தில் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு மேலும் உந்துசக்தியை ஏற்படுத்தும்
என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சவர்மா கடைகள் உட்பட அனைத்து உணவுக்கடைகளும் மக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
தேவையற்ற நடவடிக்கை
மக்களுக்கு தரமான, ஆரோக்கியமான உணவை அரசு உறுதி செய்யவேண்டிய அதே நேரத்தில் அதுபொதுவான நடவடிக்கையாக அமையவேண்டும். அது எல்லா உணவுகளின் தரத்தையும் உறுதிசெயயும் நடவடிக்கையாக அது அமைய வேண்டும். அதிகாரிகளின் தேவையற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை.