"தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் தேவை" கேவி பள்ளிகள் கொடுத்த விளம்பரம்.. மீண்டும் விவாதமான இந்தி திணிப்பு
சென்னை: தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் தேவை என்று ஒரே நேரத்தில் 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தரப்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியாகி இருப்பது பேசு பொருளாகியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்ற புகார் எழுந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள விளம்பரங்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் அனைத்து மாநிலங்களும் மும்மொழி கொள்கையை ஏற்கும் போதும், தமிழ்நாடும் ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.

பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தரப்பிலும் இந்தி திணிப்புக்கு எதிராக தீவிர போராட்டங்களும், பொதுக் கூட்டமும் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக பாஜக தரப்பில் தொடர்ச்சியாக இந்தி மொழியை தமிழக மாணவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல் தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை என்றும், தமிழிலேயே மாணவர்கள் படிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுப்பதற்கே ஆசிரியர்கள் இல்லை என்று சில தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளி வந்தது. மொத்தமாக 100 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை. ஒரே வகுப்பில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழாசிரியர் நியமிக்கப்படுவார் என்ற நிலை உள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், நாங்கள் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சரிடம் கொண்டு செல்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழாசிரியர் தேவை என்று செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் தமிழ் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியாகி, பிப்.24ஆம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications