அன்னபூர்ணா உரிமையாளரைப் பணிய வைத்த அதிகாரம்.. உண்மை, சத்தியத்தை மறைக்க முடியாது.. சீமான் சுளீர்
சென்னை: கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசிய விவகாரமும், அதன் பின்னர் அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவருடைய கேள்வியில் உள்ள உண்மையையும், சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது என்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பி கேள்விகள் தொடர்பான வீடியோ, அதேசமயம் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ என தொடர்ந்து வைரலாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது கொங்கு கள அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து, லண்டனில் இருந்த அண்ணாமலையே மன்னிப்பு கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோவை, கொடிசியாவில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அவர் பேசுகையில், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள்.
பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது." என்று கூறினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார். அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்தான் மன்னிப்பு கேட்பதற்காக வந்தார். நாங்கள் மிரட்டி அவர் வந்ததாகவும், ஜாதி ரீதியாகவும் சிலர் சாயம் பூசுகின்றனர் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறுகையில், "கோவை அன்னபூர்ணா உரிமையாளரின் கேள்வியில் உள்ள உண்மை உங்களுக்குத் தெரியும். சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டை முதல் கடிகாரம் வரை எல்லாவற்றுக்கும் வரி. ஒரு மனிதன் வீடு கட்ட நினைத்தால் கூட வரிதான் கட்ட முடியும். மக்கள் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதைத்தான் அவர் கேட்கிறார்.
அந்தக் கேள்வி நியாயம் என்பது நாடெங்கிலும் பரவி விட்டது. அதை அதிகாரம் பணிய வைக்கிறது. சீனிவாசன் வருத்தம் தெரிவித்தாலும் அவருடைய கேள்வியில் உள்ள உண்மையையும் சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications