திமுக கூட்டணியை விட்டும் விலகும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு துளியும் கிடையாது: செல்வபெருந்தகை
சென்னை: திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஒரு இழுபறியும் இல்லை என விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை திமுக வழங்கியது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, என 9 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கேட்டு வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், அது தொடர்பான விருப்ப பட்டியலும் காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளன. திமுகவோ 7 சீட்டுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து வருகிறது. அதிகப்பட்சம் 8 சீட்டில் திமுக வந்து நிற்கிறது. இதற்கு மேல் 1 சீட்டுக்கு கூட உறுதியாக வாய்ப்பில்லை என திமுக மிகத் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இதனால் இது குறித்து மல்லிகார்ஜுனே கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஒரு இழுபறியும் இல்லை என்றும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி தான் தொகுதி பங்கீட்டு உடன்பாடு கையெழுத்தானது என்றும் அதனால் இன்னும் நாட்கள் இருக்கிறது எனவும் கூறினார்.
மேலும், திமுக கூட்டணியை விட்டும் விலகும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு துளியும் கிடையாது என்றும் ராகுல் காந்தி, ஸ்டாலின் இடையேயான நட்பு பரிசுத்தமானது எனவும் கூறிய செல்வப்பெருந்தகை, திமுகவுடன் சிறந்த தோழமைக் கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது என்றும் ஒரு போதும் தாங்கள் திமுகவை விட்டுக்கொடுத்து பேசமாட்டோம் எனவும் செல்வபெருந்தகை கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சில மாதங்களுக்கு முன்னர் தானும், மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் எதேச்சையாக துக்க வீட்டில் சந்தித்த போது அவர் கூறியதைத் தான் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்தேனே தவிர தங்களுக்கு அது போன்ற விருப்பமில்லை என்றார்.
அதே போல் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது கனவு என்றும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தான் தாம் கூறியிருப்பதாகவும் தனது பேச்சை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தில் புரிந்துகொண்டால் தாம் எப்படி பொறுப்பு எனவும் வினவியுள்ளார்.












Click it and Unblock the Notifications