துரோகம் செய்தது யார்?! கோபியில் அழுத்தமாகவே கூறினேனே! செங்கோட்டையன் விளக்கம்!
சென்னை: துரோகம் செய்தார்கள் என நான் பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோபி அருகே ல.கள்ளிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது: துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன்.

என்னை விமர்சிக்கவில்லை என ஆர்.பி.உதயகுமாரே கூறிவிட்டாரே என செங்கோட்டையன் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, செங்கோட்டையன், பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என அழுத்தமாக கூறினேன் என்றார்.
அதிமுகவில் கடந்த சில தினங்களாக சலசலப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அதிமுக தொடங்கப்பட்டபோது நான் சாதாரண தொண்டன். அப்போது எனக்கு பொருளாளர் பதவியை எம்ஜிஆர் வழங்கினார். எம்ஜிஆரோடு 14 முறை நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழகம் முழுவதும் கிராமம் வாரியாக உள்ள அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்.
அத்திக்கடவு- அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதன் பிறகு எத்தனையோ சொல்கிறார்கள். என் வீட்டிற்கு நான் கேட்காமலேயே போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள். அதை பற்றி எனக்கு கவலையில்லை.
என்னை பொருத்தவரை நேர்மையான பாதையில் தன்னலம் கருதாமல் நான் பாடுபடுகிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்த போது அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரலைக் காட்டினால் அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறேன். "எதை கொடுத்தாலும் வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியவர், விசுவாசமானவர் செங்கோட்டையன் என ஜெயலலிதாவே என்னை பாராட்டியுள்ளார். நான் தொண்டனாகவே பணியாற்றக் கூடியவன். என்றுமே தலைவராக ஆசைப்பட்டதில்லை.
சில துரோகிகளால் நாம் கடந்த தேர்தல்களில் தோற்றோம். அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என செங்கோட்டையன் பரபரப்பாக பேசியிருந்தார். இதையடுத்து யார் அந்த துரோகிகள் என்ற விவாதம் தொடங்கியது. துரோகிகள் என்ற வார்த்தைக்கு பலர் கண், காது, மூக்கு வைத்து பேசி வருவதையடுத்துத்தான் செங்கோட்டையன் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications