மாணவர்களின் ஐடி கார்டில் சாதிப் பெயரா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப் பெயர் போட சொல்ல மாட்டோம், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சாதிகள் இல்லையடி பாப்பா என்பதே தமிழக அரசின் கொள்கை என்று கூறிய ராஜ்மோகன், பள்ளி மாணவர்களை சாதிப் பெயர் கொண்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் செய்யவே மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் இடம்பெற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பாக செங்கோட்டையன் பேசுகையில், பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களை குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் உத்தரப்படி முதற்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையில் மாணவர்களின் முகவரி, சாதி சான்றிதழ் விவரங்கள், இரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் சான்றிதழுக்காக அலைவது தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனின் இந்த பேச்சிற்கு திமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செங்கோட்டையனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
கட்டாயமாக மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப் பெயர் போட சொல்ல மாட்டோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்பதே தமிழக அரசின் கொள்கை.. சாதி சான்றிதழ் முன்பெல்லாம் பேப்பரில் கொடுப்பார்கள். அது எளிதாக மிஸ்ஸாகிவிடும். அதனால் சாதி சான்றிதழை அட்டையில் கொடுகக் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களை சாதிப் பெயர் கொண்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் செய்யவே மாட்டோம். செங்கோட்டையனும் இது குறித்து தெளிவுப்படுத்துவார். அறிக்கை வெளிடுவதாகவும் கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார். ராஜ்மோகனின் இந்த விளக்கம் செங்கோட்டையனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications