“ஹால்மார்க்கை எப்படி கைப்பற்ற முடியும்? அரைவேக்காடு” - அதிமுக வேட்பாளருக்கு செந்தில் பாலாஜி பதிலடி
சென்னை: ஹால்மார்க் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அது தெரியாமல் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனின் அரைவேக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்? என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கொங்கு மண்டலத்தை கைப்பற்ற அதிகார போட்டி நடைபெறுவதால் கோவை தெற்கு தொகுதியில் போட்டி அனல் பறக்கிறது. செந்தில் பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் என அனல் தகிக்கிறது.

இநிந்லையில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். கோவை தெற்கு தொகுதி தங்க நகை தொழிற்சாலைகள் நிறைந்த இடம். செந்தில் பாலாஜி இந்த தொகுதியை விரும்பக் காரணம் என்ன தெரியுமா? அவர் எப்போதுமே 1 ரூபாய் போட்டால் 10 ரூபாய் கிடைக்குமா எனப் பார்ப்பவர். கோவை தெற்கில், ஹால்மார்க் சான்று வழங்குவதை தன் கையில் எடுத்துக்கொண்டால் நகை தொழிலாளர்கள் தன்னிடம் தான் வரவேண்டும், தான் வைத்தது தான் சட்டம் என்ற என்ணத்தில் இந்த தொகுதிக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அம்மன் அர்ஜுனனின் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. மத்திய பாஜக அரசின் தொகுதி மறு வரையறைக்கு எதிராக கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்களை மறுத்து வருகிறது. தற்போது தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் போராட்டம் நடத்தியுள்ளார். பாஜக அரசு தமிழக மக்களின் குரல்வளையை நெரித்து, மாநிலங்களின் பிரநிதித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு தமிழக மக்கள் நிச்சயமாக பதில் தருவார்கள். வெண்ணெய்மலை கோவில் இனாம் நிலப்பிரச்சனை என்பது அதிமுக ஆட்சியில் வந்தது. இனாம் நிலத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாஜக தொடர்பு அமைப்பை சேர்ந்தவர்.
அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்யாமல், தவறான ஆவணங்களை தாக்கல் செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு டி.ஆர்.ஓ-க்கள் கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்து, குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் நில பிரச்சனைக்கு மீண்டும் அமைய உள்ள திமுக ஆட்சியில் நிரந்தர தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் செய்யும் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். வழக்கை நடத்துபவர் யார்? என்பது உங்களுக்கும் தெரியும். எனவே, ஊடகங்களும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
மே 4ஆம் தேதி பாருங்க. நல்ல முடிவை மக்கள் வழங்குவார்கள். கரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 4 தொகுதிகளிலும் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். வருமான வரி சோதனை என்பது புகாரின் பேரில் வருவது, வழக்கமான ஒன்று. தேர்தலுக்குப் பிறகு அந்த சோதனை எப்படி நடந்தது என்பது தெரிந்துவிடும். 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனை திட்டங்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டு எங்களது வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் அவர்கள் செய்த திட்டங்களை முன்னெடுக்காமல், தவறான தகவல்களை சொல்லி, தனிநபர் தாக்குதல் மூலம் பிரச்சாரம் செய்கின்றனர்" என்றார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, "ஹால்மார்க் அலுவலகத்தை தனிநபர் எப்படி கையகப்படுத்த முடியும்? அது ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம். அரசு கொடுக்கும் அனுமதியை தனிப்பட்ட யாராவது கைப்பற்ற முடியுமா?
ஹால்மார்க் நிறுவனம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல், அரைவேக்காட்டுத் தனமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? வதூறு பரப்பும் நோக்கில் அம்மன் அர்ஜுனன் பேசுகிறார். தங்கநகை வியாபாரிகளுக்கு நான் எந்தளவிற்கு துணையாக இருக்கிறேன் என மக்களுக்கு தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications