"தல" இருக்கு "வால்" ஆடுது.. கரூர் திமுகவில் பெரும் சலசலப்பு.. அடக்கி வைப்பாரா ஸ்டாலின்?
Recommended Video
சென்னை: திமுகவில் அண்மையில் இணைந்த செந்தில் பாலாஜி தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் போலும். இதை ஸ்டாலின் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக புதிதாக கட்சியில் இணைந்தவர்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அக்கட்சி நிர்வாகிகளை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது வழக்கம்.எல்லாம் நம் கல்லூரி, அலுவலகத்தில் நடப்பது போன்றதுதான்.
ஆனால் அண்மையில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை முடித்த கையோடு சொந்த மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்.
முக்கியத்துவம்
அதிலும் கரூர் மாவட்டச் செயலாளரை கழற்றிவிட்டு விட்டு இவர் மட்டும் நேராக போய் சந்தித்து பேசுவது ஆலோசனை நடத்துவது என்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளாராம். என்னதான் தானே போய் அறிமுகம் செய்து கொண்டாலும் மாவட்டச் செயலாளருக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்காதது அங்குள்ள சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
வட்டாரங்கள்
கரூர் மாவட்டத்தை பொருத்தவரை பெரிய ஜாம்பவான் ஒருவர் மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரால் தொடர்ந்து செயல்பட முடியாத காரணத்தால் நன்னியூர் ராஜேந்திரனை மா.செ.வாக்கியுள்ளனர். ஆனால் அவரது செயல்பாடுகளும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றே கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
செந்தில் பாலாஜி
மேலும் அதிமுகவில் இருந்த போது செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிகளில் ஒருவரும் குறை கண்டுபிடிக்க முடியாது. இது அவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆகியுள்ளது. ஆனால் மற்ற நிர்வாகிகளின் எண்ணமோ தங்களது மா. செ. செயல்படாவிட்டாலும் அவர் பதவிக்கென செந்தில் பாலாஜி மரியாதை கொடுக்க வேண்டும்.
வால் ஆடுது
ஆனால் தலை இருக்கும் போது வால் ஆடுகிறது என்பதற்கேற்பு செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் இருக்கிறது. இப்பவே இப்படி என்றால் அவருக்கு அவர் நினைக்கும் பதவியோ அல்லது வேறு ஒரு பதவியோ வழங்கப்பட்டால் அவர் இன்னும் எப்படியெல்லாம் ஆடுவாரோ என முணுமுணுக்கின்றனர் கரூர் நிர்வாகிகள். இதை ஸ்டாலின் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.