வருங்கால கேப்டன் சுப்மன் கில்.. அவரின் கிரிக்கெட் அறிவு வியக்க வைக்கிறது.. விக்ரம் சொலங்கி பேட்டி!
சென்னை: இந்திய அணியின் இளம் வீரரும், குஜராத் அணியின் தொடக்க வீரருமான சுப்மன் கில், வரும் காலத்தில் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று குஜராத் அணியின் இயக்குநர் விக்ரம் சொலங்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக எந்தப் பக்கம் திரும்பினாலும் சுப்மன் கில் தான். வங்கதேச அணியுடன் சதம், இலங்கையுடன் சதம், நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் என்று அடுத்தடுத்து மிகப்பெரிய சதங்களை விளாசி வருகிறார் சுப்மன் கில்.
இந்த ஆட்டமெல்லாம் கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக சுப்மன் கில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த பின்னரே தொடங்கியது. கடந்த ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி 428 ரன்களை குவித்த சுப்மன் கில், இம்முறை ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கிறார்.

விக்ராந்த் சொலங்கி பேட்டி
இந்த நிலையில் குஜராத் அணியின் இயக்குநர் விக்ரம் சொலங்கி கூறுகையில், இளம் வீரராக இருந்தாலும் சுப்மன் கில் தாமாக முன்வந்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வார். அதன் மூலமாகவே அவருக்குள் இருக்கும் தலைமை பண்பை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக, பின்பாகவும் அவ்வளவு பயிற்சியில் ஈடுபடுவார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் கண்ணியத்துடன் அணுகி வருகிறார். அதனால் நிச்சயம் சுப்மன் கில் வரும் காலங்களில் கேப்டனாக அதிக வாய்ப்புகள் உண்டு.

எதிர்கால கேப்டன் சுப்மன் கில்
சிறந்த கிரிக்கெட் அறிவை கொண்டுள்ள சுப்மன் கில்லிடம், குஜராத் அணியின் ஒவ்வொரு முடிவு குறித்து ஆலோசிப்போம். அதேபோல் அவரின் கூற்றுகையும் பிறந்தள்ளாமல் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஜாம்பவான் வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் வரும் காலத்தில் சுப்மன் கில் கேப்டனாக வாய்ப்புள்ளதாக விக்ரம் சொலங்கி கூறியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விதிகள்
தொடர்ந்து ஐபிஎல் தொடரின் புதிய விதிமுறைகள் பற்றிய கேள்விக்கு, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை டி20 கிரிக்கெட்டுக்கு புதிய வடிவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் யுக்திகள் ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்க கால அவகாசம் கிடைக்கும். இதுபோன்ற புதிய விதிகளுக்கு அனைத்து அணிகளும் எப்படி தயாராகிறார்கள் என்பதை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

சென்னை - குஜராத் மோதல்
பின்னர் சென்னை அணிக்கு எதிராக முதல் போட்டியில் குஜராத் அணி ஆடவுள்ளது பற்றி கூறுகையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் அனைத்து அணிகளும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள். முதல் போட்டியில் ஆடவுள்ள சென்னை அணி எந்த அளவிற்கு பிரஷரில் உள்ளதோ, அதே அளவிற்கு தான் குஜராத் அணியும் பிரஷரில் உள்ளது. ஆனால் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை தொடங்கவே குஜராத் அணியினர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications