வேறு எதிலாவது சம்பாதிங்க..’இதை’ மட்டும் விட்ருங்க! 10 லட்சம்..பாமக ப்ளான்! அன்புமணி என்ன சொன்னார்?
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மால் வரப் போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் பூங்கா அமைத்தே ஆக வேண்டும், ஒரு ஏக்கரை கூட வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்க மாட்டோம்.. சம்பாதிக்க நினைத்தால் வேறு எதிலாவது சம்பாதியுங்கள் , கோயம்பேட்டை மனசாட்சியுடன் விட்டு விடுங்கள் என கூறியுள்ளார் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ்.
கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில் சென்னை மாநகரின் பெரிய பசுமைப் பூங்காவை அமைக்கக் கோரி பசுமைத்தாயகம் சார்பில், எம்.எம்.டி.ஏ காலனியில் நடைபெற்ற "10 லட்சம் கையெழுத்து இயக்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி," கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது 30 லட்சம் மக்களின் கோரிக்கை . சென்னையில் அதிக பூங்காக்கள் வேண்டும். 30 ஆண்டில் சென்னையின் பசுமைப் பரப்பு, பொதுவெளி 50 விழுக்காடு குறைந்துவிட்டது. கோயம்பேடு ஏரியை மூடிவிட்டுத்தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை உருவாக்கினர். 60 ஏக்கரில் கோயம்பேடு பசுமைப் பூங்கா வேண்டும்.
சுதந்திர தினத்தன்று கோயம்பேடு பூங்கா குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கு கருணாநிதி பெயரை முதல்வர் வைத்துக் கொள்ளட்டும். திராவிட மாடல் என்பது அம்பாஸ்டர் கார் காலத்தை சேர்நத பழைய மாடல்போலதான் உள்ளது. சென்னையில் 850 பூங்காக்கள் வரை உள்ளன. அதில் 800 பூங்காக்கள் 2 ஏக்கருக்கு உட்பட்ட சிறிய பூங்காக்கள். சென்னையில் 5 பூங்காதான் 10 ஏக்கருக்கு மேல் உள்ளது. கோயம்பேடு பூங்காவால் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
நடுத்தர வர்க்க மக்களுக்கு கேளிக்கை விடுதிகள் வேண்டாம். பூங்காக்கள்தான் வேண்டும். கோயம்பேட்டில் பூங்கா அமைத்தே ஆக வேண்டும். ஒரு ஏக்கரை கூட வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்க மீட்டோம். சம்பாதிக்க நினைத்தால் வேறு எதிலாவது சம்பாதியுங்கள். கோயம்பேட்டை மனசாட்சியுடன் விட்டு விடுங்கள். முதல்வர் கோயம்பேட்டில் பூங்கா அமைத்து அந்த பூங்காவிற்கு தனது தந்தை பெயரைக் கூட வைத்துக் கொள்ளட்டும்.
சென்னைக்கான காலநிலை செயல் திட்டத்திற்கான தொடக்கமாக கோயம்பேடு பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். கையெழுத்து இயக்கம் அரசுக்கு அழுத்தம் தரும். 30 லட்சம் கையெழுத்துகளை பாமகவினர் பெற வேண்டும். அரசுக்கு தேவை மல்டிபிளக்ஸ் , மால்கள்தான் , ஆனால் மக்களுக்கான தேவை 60 ஏக்கரில் பசுமைப் பூங்கா. சுதந்திர தினத்தன்று முதல்வர் கோயம்பேடு பூங்காவிற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications