டெல்லி விவசாய போராட்டம் தந்த உத்வேகம்.. சீக்கியராக மாறி 7 பேர் தமிழகத்தில் போட்டி! சுவாரசியம்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 'பகுஜன் திராவிட கட்சி' சார்பில் போட்டியிடும் தமிழ் சீக்கியர்கள் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களுக்கு தேர்தல் தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 39+1 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் 'பகுஜன் திராவிட கட்சி' சார்பில் தமிழ் சீக்கியர்கள் களமிறங்கியுள்ளனர்.

அதாவது தமிழகத்தை சேர்ந்த ஜீவன் சிங், சீக்கிய மதத்தின் மீது கொண்ட பற்று காரணமாக சீக்கியராக மாறியிருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு வரை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்த இவர், பின்னர் தனியாக 'பகுஜன் திராவிட கட்சியை' உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சீக்கிய மதத்தின் மூலம் கலாச்சார அடையாளத்தை நிலைநாட்டி, அதன் மூலம் அடிமட்ட அளவில் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதே எனது இலக்கு" என்று கூறியுள்ளார்.
மேலும், "சீக்கிய மதத்தால் மட்டுமே சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்திய மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேர் எஸ்சி/எஸ்டிகள், ஓபிசி மற்றும் மத சிறுபான்மையினராக இருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்களின் உயரிய நோக்கமாகும்" என்று கூறியுள்ளார்.
இவருடைய பகுஜன் திராவிட கட்சி சார்பில் 7 தமிழ் சீக்கியர்கள் தற்போது தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஏழு பேரும் வெவ்வேறு சாதி மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 2021ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் நடத்திய தீவிரமான போராட்டத்தில் பங்கேற்று, அதன் பின்னர் சீக்கியர்களாக தங்களை மதம் மாற்றிக்கொண்டனர்.
இவர்களில் செல்வகுமார் என்கிற செல்வ சிங் திருநெல்வேலியிலும், கொற்கை பழனிசாமி சிங் விருதுநகரிலும், ராஜன் சிங் கன்னியாகுமரியிலும், சீதா கவுர் தென்காசியிலும், மணிவாசகம் ராமநாதபுரத்திலும், பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம் சிங் தூத்துக்குடியிலும், நாக வம்ச பாண்டியன் சிங் மதுரையிலும் போட்டியிடுகின்றனர். இதில் கடைசி இரண்டு வேட்பாளர்களுக்கு மட்டும் ஏழு கதிர்கள் கொண்ட பேனா முனை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் வைர சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தாங்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிய வேட்பாளர்கள், "தமிழகத்தில் திராவிட கட்சிகள் அநீதிக்கு எதிராக நிற்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் போராடுகிறோம்" என்று கூறியுள்ளனர்.
ஏற்கெனவே தமிழகத்தில் திமுக vs அதிமுக vs நாம் தமிழர் கட்சி vs பாஜக என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், பகுஜன் திராவிட கட்சியின் வருகை பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications